Aran Sei

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

பிரயாக்ராஜில், அரசியல் ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீட்டை ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் கொண்டு இடித்தது. ஜூன் 10ஆம் தேதி நடந்த வன்முறைக்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நிர்வாகம் கூறுகிறது. அங்கு நடந்த விஷயங்கள்குறித்து, அவருடைய மகள் சுமையா பிபிசி செய்தியாளர் அனந்த் ஜனானேவுக்கு அளித்த நேர்காணலின் முழு விவரங்கள்:

சுமையா, நீங்கள் இந்த வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறீர்கள்?

நாங்கள் 20 ஆண்டுகளாக இங்கு வாழ்கிறோம். நான் இங்குதான் பிறந்தேன். நான் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு இந்த வீட்டைக் கட்டினார்கள்.

ஜாவேத் முகமது வீடு இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது; உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கருத்து

காவல்துறை அறிக்கைகளில், நடந்த வன்முறைக்கு முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் உங்கள் தந்தை என்று சொல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

என் அப்பாவை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள் என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். இதில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. நீங்கள் அவருடைய கடைசி ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தால், அதில் அவர் சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்துச் சொல்லியிருப்பார். அமைதி, பாதுகாப்பு குறித்துப் பேசும் ஒரு மனிதர், எப்போதும் நிர்வாகத்தோடு ஒத்துழைக்கும் ஒரு மனிதர், திடீரென்று இரவோடு இரவாக எப்படி வன்முறையின் முக்கிய மூளையாக மாற முடியும்?

அவர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தாரா? அவர் ஏதாவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தாரா? அவருடைய பங்கு என்ன? காவல்துறை ஏன் அவர்மீது இத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது?

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் யாரையும் கூப்பிட முயலவில்லை. கூட்டத்தைச் சேர்க்க முயலவில்லை. காவல்துறை எந்த ஆதாரத்தின் பேரில் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறதோ, அதை எங்களுக்குக் காட்ட வேண்டும். அதை எங்களுக்குக் காட்டவில்லை. பாருங்கள், அவர் இப்படியெல்லாம் கூறியுள்ளார் என்று காட்டட்டும். அதை ஏன் அவர்கள் செய்யவில்லை? உண்மையில் அவர் ஆர்ப்பாட்டம் நடத்த யாரையும் கூப்பிடவில்லை.

அவர் வேண்டாம் என்று தான் கூறியுள்ளார். நீங்கள் அவருடைய பதிவைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில், நிர்வாகத்திடம் மனு கொடுங்கள், அரசியல் சாசன அடிப்படையில் எதிர்ப்பு தெரிவியுங்கள், இந்த மாதிரி சாலையில் ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை என்று அவர் எழுதியுள்ளார்.

தொழுகைக்குப் பிறகு பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லி, சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை, மக்களைத் திசை திருப்பும் ஒன்றாக காவல்துறை சித்திரித்தது.

ஜாவேத் முகமதுவின் வீடு இடிப்பு: உ.பி, முதல்வர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடிப்பாரா? – ஒவைசி கண்டனம்

உங்களிடம் ஆதாரம் உள்ளதா? உங்கள் அப்பாவுடைய வாட்ஸ் ஆப் சாட் போன்றவை உள்ளதா? உங்களுடைய அப்பா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நீங்கள்தான் அவருக்குச் சாதகமான ஆதாரங்களை வழங்க வேண்டும்…

இருக்கிறது. எங்கள் அப்பாவுடைய கடைசி ஃபேஸ்புக் சாட்டின் ஸ்க்ரீன் ஷாட் இருக்கிறது. அவருடைய ஃபேஸ்புக் கணக்கை நீங்கள் திறந்தால், அந்த ஃபேஸ்புக் பதிவை நீங்களும் பார்க்கலாம்.

நான் வாட்ஸ் ஆப் பற்றிக் கேட்கிறேன்.

வாட்ஸ் ஆப்பில் எதுவுமில்லை. நாங்கள் அவருடன் செய்த சாட்களை நீங்கள் படிக்கலாம். என்ன மாதிரியான பேச்சு நடந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

அவர் கைது செய்யப்பட்டபோது, உங்கள் தாய் ஃபாத்திமா மற்றும் உங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா?

முதலில் சுமார் 8:30 மணியளவில் காவல்துறை வந்தது. பேச வேண்டுமென்று கூறி அப்பாவை அவர்கள் அழைத்துப் போனார்கள்.

அவரும் எந்த எதிர்ப்பும் காட்டாமல், அவர்களுடன் ஒத்துழைத்தார். நான்கு மணிநேரத்திற்குப் பிறகு 12:30 மணிக்கு மேல், என்னையும் என் அம்மாவையும் பேசுவதற்காக என்று கூறி அழைத்துச் சென்றார்கள். குடும்ப உறுப்பினர் அதிக நேரமாகியும் திரும்பி வரவில்லை என்றால், அதுவும் நகரத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கும் நேரத்தில் அனைவருக்குமே கவலை ஏற்படும். என் அம்மாவும் பயத்தில் அங்குப் போக நினைத்தார்கள்.

எங்களை அழைத்துச் செல்லும்போது, நாங்கள் அப்பாவைக் கொண்டு சென்றுள்ள அதே காவல் நிலையத்திற்குத்தான் எங்களையும் அழைத்துச் செல்கிறார்களா என்று கேட்டோம். ஆம் என்றார்கள். “மேடம் உங்களோடு பேச வேண்டும்” என்றார்கள். ஆனால், அங்குச் சென்ற பிறகுதான் எங்களை சிவில் லைன்ஸில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

முதலில் எங்களிடம் பெயர் போன்ற விவரங்களைக் கேட்டார்கள். அப்பா வீட்டில் எப்படிப் பேசுவார், அவர் எந்த மாதிரியான பதிவுகளைப் போடுவார் என்று கேட்டார்கள். எங்களுடைய குடும்பம்பற்றிய தகவல்களைக் கேட்கத் தொடங்கினார்கள். குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள், எத்தனை பேர், எங்கு இருக்கிறார்கள், அவர்களின் முகவரி என்ன, எந்த காவல்நிலையத்திற்குக் கீழ் வருகிறது என்பன போன்ற கேள்விகளைக் கேட்டார்கள்.

உ.பி: தவறான தகவல்களுடன் நோட்டீஸ் வழங்கிய மாவட்ட நிர்வாகம் – சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட அரசியல் செயல்பாட்டாளர் ஜாவேத் முகமதுவின் வீடு

 உங்களிடம் விசாரணை செய்தபிறகு உங்களை விட்டுவிட்டார்களா?

இல்லை, இரவு வந்து, எங்கள் கைபேசியைக் கொடுக்காமல், அவர்களின் கைபேசி மூலம் வீட்டுக்குக் கூப்பிட்டுக் கொடுத்து, இரண்டு நிமிஷம் பேசுமாறும் வீட்டைக் காலி செய்யச் சொல்லுமாறும் கூறினார்கள். வீட்டைக் காலி செய்யும்படி, இரண்டு நிமிடத்தில் என்ன சொல்ல முடியுமோ அதை அம்மா கூறினார். எங்களிடமிருந்து கைபேசியைப் பிடுங்கிவிட்டார்கள். பிறகு வீடு காலி ஆகவில்லை என்று எங்களைத் திட்டத் தொடங்கினார்கள். வீட்டை ஏன் காலி செய்ய வைக்கவில்லை என்று கேட்கத் தொடங்கினார்கள். நாங்கள் அங்கு உட்கார்ந்து இருந்தோம். கையில் கைபேசியும் இல்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்.

உங்களிடமும் உங்கள் அம்மாவிடமும் எப்படி நடந்துகொண்டார்கள்?

ஆரம்பத்தில் சரியாக இருந்தது. ஆனால், வீடு காலி செய்யும் பேச்சு தொடங்கிய பிறகு, மகளிர் கான்ஸ்டபில் ஒவ்வொருவராக வந்தார்கள். ஏதேதோ பேசத் தொடங்கினார்கள். அச்சுறுத்தும் விதமாக மிரட்டினார்கள். பிறகு ஒரு ஆண் கான்ஸ்டபிள் வந்து, அம்மாவைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினார். நாங்கள் அங்கேயே உட்கார்ந்து இருந்தோம். என்ன செய்வது, என்ன நடக்கிறது என்று புரியவில்லை. காலையில் சுமார் 8:20 மணிக்கு எங்களுடைய உறவினர் வீட்டில் எங்களைக் கொண்டுபோய் விட்டார்கள்.

எவ்வளவு நேரம் காவல் நிலையத்தில் இருந்தீர்கள்?

இரண்டு இரவுகளை அங்குக் கழித்தோம்.

அதாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு…

ஆம், பிறகு ஞாயிறு காலையில் எங்களைக் கொண்டுபோய் விட்டார்கள். அதிலிருந்து சில மணிநேரம் கழித்து புல்டோசர் எங்களுடைய வீட்டை இடித்தது.

இந்த விவகாரத்தில், இந்த வீடு யாருடையது, நிலம் யார் பெயரில் உள்ளது?

இந்த நிலம் என் அம்மாவுடையது. என் தாத்தா, அம்மாவுடைய அப்பா, அவருக்கு வழங்கிய வீடு.

இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்

இதற்கான அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் அவர்களிடம் இருக்கிறதா?

இருக்கிறது. வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி அனைத்துமே அம்மா பெயரில்தான் வரும். இந்த நிலம் அம்மாவுடையது. வீடு அம்மாவுடையது. அனைத்துமே அம்மாவின் பெயரில் தான் உள்ளது.

இதில் சட்டவிரோதம் என்ன இருக்கு? எதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அப்பா பெயரில் நோட்டீஸ் வந்தது. அப்பா பெயரில் நோட்டீஸை 12 மணிநேரத்திற்குள் வீட்டு வாசலில் ஒட்டினார்கள். பிறகு, வீட்டை இடித்துவிட்டார்கள். வீடு அம்மாவின் பெயரில் இருக்கும்போது, அப்பா பெயரில் நோட்டீஸ் கொடுத்து எப்படி வீட்டை இடிக்க முடியும்? வீடு அம்மாவுடையது.

கட்டிடத்தின் வரைபடத்திற்கு ஒப்புதல் உள்ளதா?

பிடிஏ மூலமான வரைபடத்திற்கு ஒப்புதல் இல்லை. இதற்கு ஒரு காரணம் உள்ளது. இது தொடர்பாக எங்கள் வீட்டில் பலமுறை பேசியுள்ளோம். வரைபடத்திற்கு ஒப்புதல் இல்லையென்று அப்பா கவலைப்படுவார். ஆனால், ஒப்புதல் வாங்க, குறைந்தது 25 முதல் 30 லட்சம் வேண்டியிருந்தது.

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

உங்கள் வீட்டிலிருந்து சில ஆவணங்கள், காகிதங்கள், கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆட்சேபகரமான சில பொருட்கள் அதாவது, போஸ்டர்கள் போன்றவை. அவர் நீதிமன்றத்திற்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறதே…

எங்களுடைய வீடு இடிக்கப்பட்டபோது, அது முழுவதுமாக காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அது வெளியிலிருந்து நடந்தது. ஆனால், உள்ளே?

வெளியில் வந்த சாமான்கள் தெரிந்ததே. அதைக் கையில் எடுத்து, “பாருங்கள். இவர்கள் வீட்டிலிருந்து இது கிடைத்துள்ளது,” என்று காட்டினார்கள். அனைவரும் பார்த்தார்கள். வீடு முழுக்கக் காலியானபோது, அனைவரும் பார்த்தார்கள். பிறகு வீடு இடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் எங்களுடைய வீட்டிலிருந்து ஆயுதம் அல்லது வேறு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், வீடு முழுவதும் இடிந்தபிறகு அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கிறது. அது எப்படியென்று தெரியவில்லை. வீடு முழுவதும் உடைந்தபிறகு, அனைத்து சாமானையும் வெளியில் தூக்கிவீசிய பிறகு எப்படிக் கிடைக்கும்?

 உங்கள் அப்பா லைசென்ஸ் பெற்ற ஆயுதம் வைத்திருந்தாரா?

எங்களிடம் லைசென்ஸ் உள்ள ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனால், தேர்தல் நேரத்தில் அதை ஒப்படைத்துவிடுவோம். அதேபோல, அந்தத் துப்பாக்கியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் ரசீதும் எங்களிடம் இருந்தது. ஆனால், இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. இப்போதும் அந்தத் துப்பாக்கி அங்குதான் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு, அதைக் கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

எங்களுடைய வீடு இடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் தங்குவதற்கே இடமில்லை. வீட்டை எப்படியோ கட்டிவிடுவோம். எங்கேயாவது தங்கிக் கொள்வோம். ஆனால், குடும்பம்! அவர்கள் ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்.

உ.பி. புல்டோசர் நடவடிக்கை சட்டத்தை கேலிக்கூத்தாக்குகிறது – உச்ச நீதிமன்றம் தலையிட முன்னாள் நீதிபதிகள் வலியுறுத்தல்

ஜாவேத் அகமதின் வழக்கறிஞர் கே.கே.ராய், அனந்த் ஜனானேவுடன் பேசிய விஷயங்கள்.

இந்த வீட்டை இடிக்கும் நடவடிக்கை, சட்டரீதியாக எவ்வளவு தவறானது? இது தவறு என்று எப்படி நிரூபிப்பீர்கள்?

இங்குப் பாருங்கள். புல்டோசர் நடவடிக்கை என்பது, சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தவறானது. இந்த விவகாரத்தில் இரண்டு தவறுகள் நடந்துள்ளன. முதலில் ஜாவேத் அகமதின் வீட்டை இடிக்கப் போகிறோம் என்று அறிவித்தார்கள். ஆனால், அவர்கள் இடித்தது ஜாவேத் அகமதின் வீடு இல்லை. அது பர்வீன் ஃபாத்திமாவுடைய வீடு.

அந்த வீட்டை அவருடைய அப்பா, அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இஸ்லாமிய சட்டத்தின்படி, அது முழுமையாக பர்வீன் ஃபாத்திமாவுக்குச் சொந்தமானது. அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. ஜூன் 9-ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட நோட்டீஸ் அனைத்துமே ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள். ஒரு நாள் காலக்கெடு கூட கொடுக்கப்படவில்லை. வீட்டை இடித்துவிட்டார்கள்.

 வரைபடத்திற்கு ஒப்புதல் இல்லையென்று நிர்வாகம் சொல்கிறதே?

வரைபடம் ஒப்புதல் இல்லாததற்கு, அதாவது உத்தர பிரதேச நகர்ப்புற மேம்பாட்டு சட்டத்தில், வீடு இடிக்கப்பட வேண்டுமென்று சொல்லப்படவில்லை. முதலில் காம்பௌண்டிங் செய்யுங்கள். இல்லையென்றால், சீல் வையுங்கள். அந்த வீடு தொடர்பாக தீவிரமான ஏதாவது விஷயம் இருந்தால், அதைப் பறிமுதல் செய்யுங்கள். வீட்டை இடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து சேர்மன் முன்னிலையில் 30 நாட்களுக்குள் அப்பீல் செய்யும் வசதியுள்ளது.

மேலே என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? நீங்கள் லெட்டர் பெட்டிஷன் போட்டுள்ளீர்கள். ஆனால், நீதிமன்ற விடுமுறை நடக்கிறது. தலைமை நீதிபதியும் இல்லை.

நாங்கள் உச்ச நீதிமன்றத்திடமும் பேசியுள்ளோம். அனைத்து ஆவணங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் ரெகுலர் பெட்டிஷன் தாக்கல் செய்யும் முடிவை எடுத்துள்ளோம். ஜஹாங்கிர்புரி வீடுகள் தகர்ப்பு விஷயத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இடிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

அவர் குற்றமற்றவர் என்று எப்படி நிரூபிப்பீர்கள்?

அவர்மீதான வழக்கில், ஜாமீனுக்கு நாங்கள் விண்ணப்பிப்போம். அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்வோம். ரிட் எஃப்.ஐ.ஆரையும் நாங்கள் எதிர்ப்போம். அவருடைய மனைவி மற்றும் மகளைச் சட்டவிரோதமாக மூன்று நாட்கள் காவல் நிலையத்தில் வைத்திருந்தது தொடர்பாகவும் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடுப்போம்.

நன்றி: பிபிசி தமிழ்.

புல்டோசர் பாபாவும், புல்டோசர் மாமாவும் | Aransei Explaine

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்