இந்திய குற்றவியல் நீதிமுறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டும் துஷ்பிரயோகங்கள் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை கோருகிறது. சட்டத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோர், அதைத் தங்களுக்கு எதிரானவர்களாகக் கருதுபவர்களை எரிச்சலடைய வைக்கப் பயன்படுத்துகின்றனர்.இது ஒரு சரியான அணுகுமுறையல்ல. உதாரணமாக ஒரு நபருக்கு எதிராகப் பல்வேறு மனிதர்கள்மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடரப்படும் வழக்குகளையே குறிப்பிடுகிறேன். இவ்வாறான செயலின் மூலம் குற்றச்சாட்டப்பட்டவர் துன்புறுத்தப்பட்டு ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கும், ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு அலைக்கழக்கபடுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை – பாஜக திட்டவட்டம்
சமீபத்திய காலத்தில் சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ஏப்ரல் 21, 2020 ஆம் தேதி ஆர் பாரத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியினால், அந்தத் தொலைக்காட்சியின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது நாட்டின் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தற்செயலாக (நான் சமர்பித்த நோக்கங்களுக்கு இது முக்கியமல்ல) பெரும்பாலான புகார்களில் ஒரே மாதிரியான சொற்கள் இருந்தன, மேலும் உச்சநீதிமன்றத்தின் தகவலின்படி, புகார்களில் பயன்படுத்தப்பட்ட மொழி, கருத்துகள், வரிசைப்படுத்துதல், எண்ணிக்கை ஆகியன ஒரே மாதிரி இருந்தன.
அர்னாப் கோஸ்வாமிக்கு முன்பாக இரண்டு வழிகள் இருந்தன : ஒன்று, வழக்குகளைச் சவால் விடுவது மற்றும் அனைத்து புகார்களையும் எதிர்த்து வழக்கு நடத்துவது, இரண்டாவதாக, உச்சநீதிமன்றத்தை அணுகி, அனைத்து புகார்களையும் ஒரே நீதிமன்றம் அல்லது ஒரே காவல் நிலையத்திற்கு மாற்றக்கோருவது. இந்த நிகழ்வில் கோஸ்வாமி, உச்சநீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, அவர்மீதான புகார்களில் ஒன்றை (ஏப்ரல் 22, 2020 ஆம் தேதி, நாக்பூரில் பதியப்பட்டது) அவர் வசிக்கும் மும்பைக்கு மாற்றியது. மேலும் ஒரே நிகழ்விற்கு அதிக புகார்களைப் பதிய வேண்டிய அவசியம் இல்லை என்று மற்ற புகார்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. இத்தீர்ப்பு இந்த வழக்கிற்கு மட்டுமே வழக்கப்பட்டது.
இதே போன்ற ஒரு சம்பவம், ஜூன் 15, 2020 ஆம் ஆண்டுத் தொலைக்காட்சி தொகுப்பாளர் அமிஷ் தேவ்கனுக்கு நடந்தது. அவர்மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 7 புகார்கள் பதியப்பட்டது. இந்த வழக்குகளை அவர் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் அஜ்மீருக்கு மாற்றக்கோரி தேவ்கன் உச்சநீதிமன்றத்தை அணுகியபோது, அதை ஏற்ற நீதிமன்றம், தேவ்கன் மீதான மற்ற வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அதற்குக் காரணம் தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கு தொடுத்தவர்களுக்கு, அவர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க உரிமை இருக்கிறது என்று கூறியதோடு, தேவ்கனின் கோரிக்கையான வழக்குகளை அஜ்மீருக்கு மாற்றியது.
அதிகாரிகள் மட்டத்திலும் தனியார்மயம் – செயலாளர்களாக தனியார் நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு
கோஸ்வாமிக்கும், தேவ்கனுக்கும் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் இருந்தன. இதையே சாமானியருக்கு நிகழ்ந்தால். ஒரு மாணவரோ அல்லது வேலைவாய்ப்பற்றவரோ ஏதேனும் ஒரு தவறான கருத்தை (தவறாக இல்லாத பட்சத்திலும்) தெரிவித்தார் என்று, இது போன்ற பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டால், அவர் அனைத்து வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், மீறினால் அவர் வீட்டிற்கே சென்று அவரைக் காவல்துறையினர் கைது செய்வார்கள், இறுதியாக அந்த நபர் தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் ஒரு கோப்பாக அடங்கிப் போவார்.
தற்போது குடியரசு தினத்தன்று உயிரிழந்த விவசாயி மரணமடைந்தது தொடர்பாக ஊடகவியலாளர்கள் மிரினால் பாண்டே, ராஜன் சார்சேசாய் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. டெல்லியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாகப் பதிவு என்பதால் டெல்லியில் விசாரிக்கலாமே மாறாக, வேறு வேறு பகுதிகளில் வழக்கு தொடர்ந்ததால், இதற்காகக் குற்றம்சாட்டப்பட்டவர் அந்தப் பகுதிகளுக்கு விசாரணைக்காகச் செல்ல வேண்டும் இல்லையென்றால், அவர்களைக் கைது செய்ய அந்த மாநில காவல்துறையினர் மும்பை வருவார்கள்.
இதேபோல நாடாளுமன்ற உறுப்பினர் சசி தருர் தனது ட்விட்டர் பதிவிற்காகப் பல்வேறு தேசதுரோக வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார். அதே கருத்தை அவர் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தால், அவரின் பேச்சு (அது எத்தகையதாக இருந்தாலும்) அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும். இது ஒரு முரண்பாடான நிலைமை.
அதே சம்பவம்குறித்து ஜனவரி 30 ஆம் தேதி தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை, புல்லட் காயம் இருந்ததாகப் இறந்தவரின் குடும்பத்தினரின் கருத்தைப் பதிவு செய்திருந்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவ்வாறு குறிப்பிட்டப்படவில்லை, இறந்த விவசாயியின் தாத்தா கூறிய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டதற்காக, தி வயர் ஆசிரியர் சித்தார்த் மீத சட்டம் ஒழுக்கு பிரச்சனைக்கு வாய்ப்பு ஏற்படுத்தியதாகக் கூறி இறந்த விவசாயி கிராமமான ராம்பூரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் கருத்தைச் சொன்ன இறந்தவரின் தாத்தாமீது ராம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை, அதைச் செய்யவும் மாட்டார்கள் என்றே நம்புகிறேன். சம்பவம் நடைபெற்ற டெல்லியின் காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பான செய்திக்கு மற்ற மாநில காவல்துறையினர் ஏன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். எனவே நான் கூறுவது என்னவென்றால், சசி தரூர் மற்றும் இதர ஊடகவியலாளர்கள்மீதான வழக்குகளில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீதியை வழங்க வேண்டும். சட்டம் என்பது நீதியை வழங்குவதற்கு தான், குடிமக்களைத் துன்புறுத்துவதற்கு அல்ல. ஏற்கனவே ஒரு தலையீட்டு முன்மாதிரி இருக்கிறது, அதைப் பின்பற்றினால் நல்லது.
மதன் பி.லோக்கூர் (தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)
தமிழில்: நந்தகுமார் ஜகன்நாதன்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.