வட நாட்டில் ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பல்வேறு கட்சிகள் வேட்பாளரை களமிறக்கி வரும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வேட்பாளராக தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார். அதேவேளை, ஓ பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுமா? களத்திலிருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்த சூழ்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பிற்குப் பின் ஓ.பன்னீர் செல்வத்தையும் அண்ணாமலை நேரில் சந்தித்தார். அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில், “பாஜக வடநாட்டில் எப்படிப்பட்ட செயல்பாடுகளையெல்லாம் செய்தது… பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படியெல்லாம் கவிழ்ந்தன… அந்த ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது உங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது இருக்கிறதா? அல்லது உடைந்துவிட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன்னையன், “உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக தனியாகத்தானே நின்றது. இந்த கேள்விக்கே பொருள் இல்லை” என்று பதிலளித்தார்.
பாஜக உடனான கூட்டணி அதிமுகவுக்கு ஆபத்து என்று நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிற காரணத்தால் பாஜகவும் எங்களோடு இருக்கலாம் அல்லவா… எங்களை விரும்பலாம் அல்லவா… எங்களுக்காக பணியாற்றலாம் அல்லவா… காத்திருந்து பாருங்கள்…
அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை விரும்புகிறீர்களா? இல்லையா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பொன்னையன், திமுக நீங்களாக எல்லோருமே எங்களோடு இருந்தால் நாங்கள் வரவேற்கத்தான் செய்வோம்’ என்றார்.
Kalaignar Pen statue Issue – Jenram Interview | Kalaignar Pen Silai | kalaignar pen seeman speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.