Aran Sei

சிஏஏ எதிர்ப்பு போராளி அனிஷ் கான் மர்ம மரணம் – சிறப்பு விசாரணை குழுவை அமைத்த மேற்கு வங்க அரசு

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஷ் கான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை கண்டித்து போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இக்கொலையை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹௌவுரா மாவட்டத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனிஷ் கான் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பிப்பிரவரி 18ஆம்  இரவு காவல்துறை சீருடையுடன் கானின் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள், அனிஷ் கானை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்று கீழே தள்ளியது தான் உயிரிழப்பிற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் – உரிய விசாரணை கோரி போராட இந்திய மாணவர் சங்கம் முடிவு

காவல்துறையைச் சேர்ந்த யாரும் அனிஷ் கானின் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் அனிஷ் கான் அவரது வீட்டின் அருகில் இறந்து கிடந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனிஷ் கானின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கோரி, கொல்கத்தா அலியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த 500 மாணவர்கள் நடத்திய மெழுகுவர்த்தி பேரணியின்போது, காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முதன்மையாக ஈடுபட்டவரும் கொரோனா பெருந்தொற்றின்போது ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்தவருமான அனிஷ் கானின் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

சிஏஏ எதிர்ப்பாளர்களின் தனியுரிமைக்கு ஆபத்து – அலகாபாத் உயர் நீதிமன்றம்

அனிஷ் கானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரி, இந்திய மாணவர் சங்கம் (எஸ்எஃப்ஐ) போன்ற மாணவர்கள் அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தன.

இந்நிலையில், நேற்று (பிப்பிரவரி 21), ஹௌரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ள மம்தா பானர்ஜி, “அனிஷ் கானின் மரணம் குறித்து விசாரிக்க, காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார்கள். தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டும் என்று பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை மேற்கு வங்க காவல்துறை அமைத்துள்ளது.

Source: ANI

சிஏஏ எதிர்ப்பு போராளி அனிஷ் கான் மர்ம மரணம் – சிறப்பு விசாரணை குழுவை அமைத்த மேற்கு வங்க அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்