விழுப்புரத்தில் பட்டியலின பெண்ணின் உடலை புதைக்க ஆதிக்கச் சாதியினர் இடம் தர மறுத்ததால் இறந்த உடலை வைத்து 3 நாட்களாக பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே இறந்த பட்டியலினப் பெண்ணின் உடலை புதைக்க இடம் இல்லாததால் உறவினர்கள் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிலையான மயானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்தச்சூழலில் துக்க நிகழ்வு ஏற்படும் போதெல்லாம் ஏரி, குளம், ஓடை போன்ற இடங்களிலேயே புதைத்தும் எரித்தும் வந்துள்ளனர்.
இதற்கிடையில், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கடந்த 18 ஆம் தேதி அமுதா என்ற பெண் இறந்துள்ளார். இறந்த அமுதாவின் உடலை புதைக்க மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இறந்த பெண்ணின் உடலை புதைக்க இடமில்லாமல் 3 நாட்களாக உறவினர்கள் தவித்து வந்திருக்கின்றனர்.
இதையடுத்து நிலையான இடுகாடு அமைத்துத் தர வலியுறுத்தி, பட்டியலின மக்கள் இறந்த பெண்ணின் உடலை வைத்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். மூன்று நாள் போராட்டத்திற்கு பின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடக்கும் கொடுமைகளை ஏற்காமல்தான் டாக்டர் அம்பேத்கர் புத்த மதம் தழுவினார் – சரத் பவார்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி என்ற கிராமத்தில், அமுதா என்ற பட்டியல் சாதி பெண்ணின் உடலை புதைக்க இடமில்லாமல் 3 நாட்கள் போராட்டம் நடந்துள்ளது. அக்கிராமத்தில் இருப்பதில் 10 குடும்பங்கள் மட்டுமே பட்டியல் சாதியினர். பொது மயானம் மறுக்கப்படுவதால் ஏரி, குளம், ஓடை போன்ற இடங்களிலேயே புதைக்கவும், எரிக்கவும் வேண்டிய சூழல் நிலவுகிறது.
இக்கொடுமையை மாற்றிட அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டுத் தீர்வு ஏற்படாத நிலையில், அமுதா மரணமடைந்துள்ளார். அவருக்கும் சாதி ஆதிக்க சக்திகளால் மயானம் மறுக்கப்பட்டதால்… செத்த உடலோடு போராடும் நிலைக்கு உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
3 நாட்கள் போராட்டத்துக்குப் பின் தற்போது உடல் புதைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மயானத்திற்கான கோரிக்கை நீடிக்கிறது.
சுதந்திர இந்தியாவில், சுடுகாட்டுக்கே வழியில்லை என்றால் இது நாகரீக சமூகத்திற்கே வெட்கக்கேடு. அரசாங்கம் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைந்து செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: theekkathir
சவுக்கை சுழற்றும் நெஞ்சுக்கு நீதி | Nenjukku Neethi Review
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.