Aran Sei

“இலங்கை கடற்படை இனி கைது செய்யப்போவதில்லை, மூழ்கடித்து கொலை செய்யப்போகிறது” – வைகோ காட்டம்

புதுக்கோட்டையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் மோதி கடலில் மூழ்கடித்ததால் 4 மீனவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 20) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து, ஜனவரி 18 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் – சிறையில் அடைத்த இலங்கை நீதிமன்றம்

“இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகும் சென்றது. அதில், மெசியா (30), த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம், நாகராஜ் (52), த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி, சாம் (28), த/பெ நேச பெருமாள், மண்டபம், செந்தில்குமார் (32), த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு மீனவர்களும் அந்தப்படகில் சென்றனர்.” என்று வைகோ அம்மீனவர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.

மேலும், “எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையின் இரண்டு படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, மேற்கண்ட படகு மீது முட்டி மோதின. படகு மூழ்கத் தொடங்கி விட்டது என்று, அந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் எழுப்பிய அலறல் குரல், மற்ற படகில் இருந்த மீனவர்களுக்குக் கேட்டது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து, எந்தத் தகவலும் இல்லை.” என்று வைகோ அந்த நிகழ்வை அறிக்கையில் விளக்கியுள்ளார்.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

“நேற்று ஜன.19 காலை 10.30 மணிக்குக் கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. விசைப்படகைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளார்கள். நம்பிக்கை அளிக்கின்ற எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் மீனவர் குடும்பங்கள் கண்ணீரில் பரிதவிக்கின்றன.” என்று வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர்களை நாங்கள் பிடித்துச் செல்லவில்லை என்று, இலங்கைக் கடற்படை கூறுகின்றது. அவர்களுடைய தொடர் தாக்குதல்களில் இருந்து, தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படை காப்பாற்றவில்லை. கடந்த வாரம் இலங்கைக்குச் சென்ற இந்திய அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறினார். இனி அதற்குத் தேவை இல்லை, கைது செய்யப் போவது இல்லை, கடலுக்குள் மூழ்கடித்து விடுவோம் என்று இலங்கை காட்டி இருக்கின்றது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

’அத்துமீறும் சிங்களக் கடற்படை; வேடிக்கை பார்க்கும் இந்திய கடலோரக் காவல்படை’ – ராமதாஸ் கவலை

பாகிஸ்தான் மீது கொலைவெறிக் கோபம் காட்டுகின்ற இந்தியா, தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கின்ற இலங்கையின் சிங்கள இனவெறி அரசை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுது, நாங்களும் தமிழர்களுக்கு எதிரிதான் என்பதைக் காட்டுகின்றது  என்று குற்றஞ்சாட்டியுள்ள வைகோ, காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை, இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கை கடற்படை இனி கைது செய்யப்போவதில்லை, மூழ்கடித்து கொலை செய்யப்போகிறது” – வைகோ காட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்