உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் கல்லூரி புல்வெளியில் தொழுகை செய்யும் காணொளி வெளியானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும், இந்து வலது சாரி இளைஞர் தலைவர்கள் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
அலிகாரில் உள்ள ஸ்ரீ வர்ஷ்னி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் எஸ்.ஆர். காலித். கல்லூரி வளாகத்தில் தொழுகை செய்ததால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த சில இளைஞர் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது இடத்தில் தொழுகை செய்து பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதாக பேராசிரியர் மீது குற்றம் சுமத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இதை தொடர்ந்து இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு குறித்து குவார்சி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திடமிருந்து அறிக்கை பெற்ற பின், நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மாணவர் தலைவர் தீபக் சர்மா ஆசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லூரி வளாகத்திற்குள் தொழுகை செய்வதன் மூலம் பேராசிரியர் அமைதியான சூழலைக் கெடுக்க முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அரண்செய்யிடம் பேசிய ஆய்வாளரும் எழுத்தாளருமான அ.ஜெகநாதன், “பல்கலைக்கழகம், கல்லூரி என்பவை பல்வேறு கருத்துகள் சங்கமிக்கும் இடம். நாம் விரும்பும் சமயத்தை, வழிப்பாட்டைப் பின்பற்றலாம் என்பது அரசியலமைப்பு வழங்கியிருக்கும் உரிமை. பன்மியப் பண்பாடு கொண்ட சமூகத்தில் தொழுகை நடத்துவது என்பது அவரவர் உரிமை. பல கல்வி நிலையங்களில் கோயில் இருப்பது வெளிப்படை. சமூகத்தில் உள்ள சிறு குழுக்கள் பாசிச போக்கோடு செயல்படுகிறது என்பது நாம் அறிந்ததே. அரசின் வழிகாட்டுதலில் இயங்கும் கல்லூரி வலது சாரிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து தொழுகை செய்த பேராசிரியரைக் கட்டாய விடுப்பில் அனுப்பியது என்பது அரசு நிர்வாகமே பாசிசத்தை நோக்கி நகர்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். பேராசிரியரின் உரிமைக்குத் துணை நிற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
எழுத்தாளர் அ.ஜெகநாதன்,
அம்பேத்கர் கடிதங்கள், முதுகுளத்தூர் கலவரம் உள்ளிட்ட நூல்களின் தொகுப்பாசிரியர்.
News Source: thenewindianexpress
இந்த சவுண்ட்லாம் இங்க வேணாம் Annamalai | Surya Xavier Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.