பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் (EWS), மொத்த ஆண்டிற்கான குடும்ப வருமான வரம்பு ரூ. 8 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம் என்ற மூன்று பேர் கொண்ட குழுவின் பரிந்துரையை ஏற்க முடிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த வரம்புதான் ஏற்கனவே இப்பிரிவினருக்கு நடைமுறையில் உள்ளது.
ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் நீட்-முதுகலை சேர்க்கை தொடர்பானது.
நேற்று(ஜனவரி 2) உச்ச நீதிமன்றத்தில், இக்குழுவின் பரிந்துரையானது குடும்ப வருமானத்தை சாத்தியமான அளவுகோலாக பார்க்கிறது என்றும் EWS நிர்ணயிப்பதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என்ற வரம்பு நியாயமானதாக இருக்கிறது என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
ஒன்றிய அரசின் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலர் ஆர்.சுப்பிரமணியம், “இந்த புதிய அளவுகளை இனி வருங்காலத்துக்கும் பின்பற்றுவதற்கான பரிந்துரை உள்ளிட்ட அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது என்பதை மரியாதையுடன் இங்கே சமர்ப்பிக்கிறேன்” என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் மட்டுமே பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் என அக்குழு பரிந்துரைத்துள்ளதாக ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை மறுஆய்வு செய்யும்படி ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
‘பெண்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு’ – ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டுமென ராகுல்காந்தி அழைப்பு
அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட மூவர் குழுவில், முன்னாள் நிதிச் செயலர் அஜய் பூஷன் பாண்டே, இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்தின் செயல் உறுப்பினர் வி.கே. மல்ஹோத்ரா மற்றும் ஒன்றிய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் ஆகியோர் இடம்பெற்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, இக்குழு தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது.
நீட் முதுகலை-2021 சேர்க்கையின் தாமதத்தின் காரணமாக, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.