நாகாலாந்து மாநிலத்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்கள் பதினான்கு பேருக்கு நீதி வழங்க கோரியும் நாகாலாந்து மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று(ஜனவரி 10), நாகாலாந்தின் வணிக நகரமான திமாபூரிலிருந்து அம்மாநிலத் தலைநகர் கோஹிமா வரையிலான எழுபது கிலோமீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான நாகாலாந்து மக்கள் இரண்டு நாள் நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ள மக்கள் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், கொல்லப்பட்ட பதினான்கு பேருக்கு நீதி வழங்க கோரி முழக்கங்களை எழுப்பியபடியும் பங்கேற்றுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக, இந்நடைப்பயணம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிய அளவிலான பரப்புரைகளை பல்வேறு நாகா சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுத்திருந்தன.
இந்நடைப்பயணமானது பல கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் வழியாக செல்லும்போது, இன்னும் அதிக அளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொள்வார்கள் என்று நடைப்பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடைப்பயணத்தில் பங்கேற்றவர்கள், கோஹிமாவுக்கு போகும் வழியில் பிபேமாவில் நேற்று(ஜனவரி 10) இரவு தங்கிவிட்டு, மீண்டும் இன்று(ஜனவரி 10) காலை நடைப்பயணத்தை தொடங்கி கோஹிமாவில் முடித்துக்கொள்ள உள்ளனர்.
அதைத்தொடர்ந்து கோஹிமாவில், நடைபயணத்தில் பங்கேற்ற நாகா தலைவர்கள் நாகாலாந்து மாநிலத்தின் தற்காலிக ஆளுநர் ஜெகதீஷ் முகியின் வழியாக ஒன்றிய அரசுக்கு மனு ஒன்றையும் சமர்பிக்கவுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம், நாகாலாந்து மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் பதினான்கு பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.