நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், “தமிழக மக்கள் விரோத பாசிச பாஜகவை தோற்கடிப்போம்” என்ற முழக்கத்தின் கீழ், சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் ஒருங்கிணைந்துள்ளன.
நேற்று (ஜனவரி 20) காலை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில், இந்த கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபேற்றுள்ளது. 75க்கும் மேற்பட்ட சமூக அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முடிவில், ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டதுடன், பாஜகவை தமிழக சட்டமன்ற தேர்தலில் தோற்படிப்பது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
“ 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் திட்டக்கமிஷன் கலைப்பு, ஜிஎஸ்டி, நீட் திணிப்பு, பணமதிப்பிழக்க நடவடிக்கை, உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம், இந்தி – சமஸ்கிருத திணிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டங்கள், இரயில்வே, விமானம், துறைமுகம், இராணுவ தளவாடத் தயாரிப்பு என்று அரசு துறைகள் தனியாருக்கு தாரைவார்ப்பு, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், 567 தொழிலாளர் நீதிமன்றங்கள் கலைப்பு, வேளாண் சட்டத் திருத்தங்கள், மின்சார சட்டத் திருத்தம் என்று சமூகநீதி, மாநில உரிமை, தொழிலாளர் – உழவர் நலன் ஆகியவற்றின் மீது வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.” என்று கூட்டமைப்பு பட்டியலிட்டுள்ளது.
ஒரே தேசியம், ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்வு, ஒரே வேளாண் கொள்கை, ஒரே தேர்தல், ஒற்றையாட்சி சர்வாதிகாரம் என்று பாஜக முன்னேறி வருகிறது என்றும் இவ்வாட்சி, நிலவும் நாடாளுமன்ற அமைப்புமுறையைச் செயலிழக்கச் செய்து சிறுகும்பல் பாசிச சர்வாதிகாரக் கொடுங்கோல் ஆட்சியாக வளர்ந்து செல்கிறது என்றும் கூட்டத்தில் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், “நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்தல், ஆளுநர் தலையீடு, ஜிஎஸ்டி. பங்குதொகையைத் தரமறுத்தல், வேளாண்மை, சட்ட ஒழுங்கு, கல்வி என்று மாநிலப் பட்டியல் விவகாரங்களில் மத்திய அரசு சட்டமியற்றுதல், தமிழக கட்சிகளைச் சிதறடித்தல், தமிழக அரசியலைக் குழப்பி நிலையற்ற தன்மைக்கு மாற்றுதல் என்று சங்பரிவார பாசிச பாசக தில்லி அதிகாரத்தைக் கொண்டு தமிழகத்தின் மீது தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.” என்று கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
“பாஜகவை ஒரு பாசிச கட்சியாகவும் தமிழ், தமிழர், தமிழக விரோத சக்தியாகவும், சமய சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சக்தியாகவும் தமிழ்நாட்டின் சமூக நீதி, மாநில உரிமை, மக்கள் நலன்பேண் அரசியல் ஆகிய மரபார்ந்த அரசியலுக்கு நேரெதிரான அந்நிய சக்தியாகவும் பிரகடனப்படுத்துகிறோம்” என்றும் தமிழக மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாசிச பாஜகவைப் புறக்கணித்து அக்கட்சிப் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் பாசிச பாஜக எதிர்ப்பியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
’பாசிச பாஜக எதிர் தமிழ்நாடு’ என்ற பெயரில், சட்டப்பேரவை தேர்தலில் களம் அமைத்து, பாஜக போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றி பாஜகவைத் கட்டுப்பணம்கூடப் (Deposit) பெறமுடியாத வகையில் தோற்கடிக்க, பாசிச எதிர்ப்பில் உறுதிபூண்ட அனைத்து சனநாயக ஆற்றல்களும் களம் காண்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுக்க வேண்டியது வரலாற்று கடமையும் அவசர தேவையும் ஆகும் என்றும் ஆகவே, பாசிச எதிர்ப்பில் அக்கறையுள்ள சனநாயக சக்திகள் அனைவரும் வாய்ப்புள்ள வழிகளில், பாசிச பாஜகவைத் தோற்கடிக்கும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.