இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேல்படிப்பு மேற்கொள்ள வேண்டாம். அங்கு பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியவை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் உயர்கல்வி பயில யாரும் செல்ல வேண்டாம். இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயின்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லாது. மேலும் இந்தியாவில் அவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் முடியாது. இருப்பினும், பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் சான்றிதழ் அங்கீகரிக்கப்படும். அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இங்கு உயர் கல்வியோ அல்லது வேலை வாய்ப்போ பெற முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் டி. சஹஸ்ரபுதே, “பாகிஸ்தானில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் தரமும் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே சீனா, உக்ரைன் என வெளிநாட்டில் பயின்ற மாணவர்கள் சில பிரச்சினைகளால் கல்வி தடைப்பட்டு நிற்கின்றனர். அதனாலேயே பாகிஸ்தானில் மேற்கல்வி பயிலச் செல்ல வேண்டாம் என்று பெற்றோர், மாணவர் நலன் கருதி கூறியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Source: livemint
சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.