நிலக்கரி பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைக்கான மக்கள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைக்கான மக்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்திக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.35 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு எடுத்து வேறு பயன்பாட்டுக்குச் செலவிட்டுள்ளது. தவிர, உரத் தொழிற்சாலையில் நிதியை முதலீடு செய்யுமாறு கோல் இந்தியா நிறுவனத்தை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது.
மேலும் கோல் இந்திய நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக முக்கிய பதவிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பதவியை ஒன்றிய அரசு நிரப்பவில்லை. நிலக்கரி சுரங்க மேலாளர்கள் தூய்மை இந்தியா இயக்கப் பணிகளை மேற்கொள்ள அனுப்பப்படுகின்றனர். இதனால் நிலக்கரி சுரங்கப் பணி தேக்கமடைகிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் உள்ள நிலையில், மின்சாரம் மற்றும் நிலக்கரி தேவையை முன்கூட்டியே அறிந்து, தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து ஒன்றிய அரசு கொண்டு போய்ச் சேர்த்திருக்க வேண்டும்.
இவ்வாறு செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் கடமை. இப்பொறுப்பை நிறைவேற்றுவதில், ஒன்றிய அரசு தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக நிலக்கரி பற்றாக்குறை என்ற நெருக்கடியில் இந்தியாவை தள்ளியுள்ளது. இந்நிறுவனத்தின் நிதியும், அலுவலர்களும் மடைமாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால் 11 விழுக்காடு உற்பத்தி அதிகரித்திருக்கும். இப்போது இருக்கக்கூடிய நிலக்கரி பற்றாக்குறை என்ற நெருக்கடிக்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே காரணம்.
இச்சூழலில், தங்களுக்கு ஆதரவான நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மாநில அரசுகள் கட்டாயமாக மாதம்தோறும் அவர்களின் தேவையில் 10 விழுக்காட்டை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என்று தனது அறிக்கையில் பொதுத்துறை மற்றும் பொது சேவைக்கான மக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Source : Counterview
அடித்த கொள்ளையில் பங்கு வெளிவராத உண்மைகள் I Karikalan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.