ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “ஆர்எஸ்எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தபோது இனிப்பு விநியோகித்து கொண்டாடிய அமைப்பு தான் ஆர்எஸ்எஸ்.
மகாத்மா காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது. விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராகச் சித்தரிக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது. அக்டோபர் 2-ம் தேதி விசிக சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடைபெற உள்ளது.
நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது பாஜக மாவட்டத் தலைவர்கள் விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால், அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். எனவே, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thozhar Thiyagu explains of BJP uses NIA against its political rivals | RSS | BJP | Amitsha
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.