போராடுகின்ற விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மாநில உரிமைகளுக்கு எதிரான, கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பைப் பறிக்கிற மத்திய அரசின் ஆணவப் போக்கைக் கண்டித்தும், இன்றைய (ஜனவரி 29) குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “மத்திய அரசு அனைத்துவிதமான நாடாளுமன்ற நடைமுறைகளையும் புறக்கணித்துவிட்டு நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத விவசாய சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் அறவழியில் போராடி வருகின்றனர்.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காதது மட்டுமின்றி, அவர்கள் மீது வன்முறையை ஏவிய மத்திய அரசின் கொடுஞ்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்..
“கடும் குளிரிலும், கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான விவசாயிகள், மோடி அரசின் விவசாய விரோதச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, கடந்த 64 நாட்களாகப் போராடி வருகின்றனர். இந்த அறவழிப் போராட்டத்தில் இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு இருந்தும் மோடி அரசு மனம் இரங்கவில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி அமைதியாகவே நடந்தது. அதில் பாஜக ஆதரவாளர்கள் சிலர் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘கைதுகள், பொய் வழக்குகள்; தமிழக விவசாயிகளை பழிவாங்கும் தமிழக அரசு’ – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மேலும், “போராடும் விவசாய சங்கத்தின் தலைவர்களும் கூட இந்த வன்முறையைக் கண்டித்துள்ளனர். இதன் பின்னே இருந்த நபர்கள் யார்? அவர்களை இப்படித் தூண்டியது யார்? என்பதைப் பற்றி உச்ச நீதிமன்றத்தின் பணியிலுள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
போராடும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் அனைவரையும் பொய் வழக்குகளைப் போட்டு முடக்குவதற்கு பாஜக அரசு முயல்கிறது என்றும் அது கொஞ்சமும் ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தும் சட்டத்தை இயற்ற வற்புறுத்தியும், போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கும் வகையிலும் இன்றைய தினம் குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு
போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பது ஒன்றே நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமாக நடப்பதற்கு வழிவகுக்கும் என்று அவர் மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.