வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ‛நிவர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், மாமல்லபுரம் காரைக்கல் இடையே நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (23/11/20) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது அமைச்சர்களும், அதிகாரிகளும் இதில் கலந்துக்கொண்டனர்.
இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் :
* புயலை எதிர்கொள்ள, வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்பு குழுவினர், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முகாமிட வேண்டும்.
* புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டும்.
* பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களுக்கு, உடனடியாக அழைத்து செல்ல வேண்டும்.
* நிவாரண முகாம்களில், குடிநீர், கழிப்பறை, ‘ஜெனரேட்டர்’ வழியே மின் வசதி, உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், ‘சிலிண்டர்’கள், சமையலர்கள், பாய், போர்வை போன்றவை இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.
* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு உள்ளேயும், இன்று பகல், 1:00 மணி முதல், பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. பொது மக்களும் தங்கள் சொந்த வாகனங்களில், அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்ற தேவைகளுக்காக, பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
* கடலோர கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரங்களான கட்டுமரங்கள், மின் மோட்டார் படகுகள், மீன் வலைகள், ஆகியவற்றை உரிய முறையில், பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
* உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர்தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
* கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, அனைத்து நிவாரண முகாம்களிலும், கிருமி நாசினிகள், முகக்கவசங்கள், தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
* தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்தேக்க தொட்டகளில், முழுமையாக தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்.
* அனைத்து நீர் நிலைகளிலும், கரை உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய, போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும், தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
* நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள, நெல் மூட்டைகள், மழையில் நனையாதபடி பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்து பொருட்கள், பசுந்தீவனங்கள் போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
* நடமாடும் தொலைத்தொடர்பு கருவிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். தொலைத்தொடர்பு பாதிக்காமலிருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மின்வாரியம் சார்பில், பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு, கூடுதலாக, 1,000 பணியாளர்கள், கூடுதல் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை, பிற மாவட்டங்களில் இருந்து பெற்று, தயாராக வைத்திருக்க வேண்டும்.
* தேசிய பேரிடர் மீட்பு படையின் ஆறு பிரிவுகள், கடலுாரிலும், இரு பிரிவுகள், சென்னையிலும், தேவையான கருவிகளுடன் தங்க வைக்கப்பட வேண்டும்.இவை அனைத்தையும், மாவட்ட கலெக்டர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டம். இன்றும், நாளையும், பெரும் மழை, புயல் வீச இருப்பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில், மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்களை, நீர் படாத வகையில், பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ‘டார்ச் லைட், ‘பேட்டரி’, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை, போதுமான அளவு, இருப்பு வைத்திருக்க வேண்டும். மின் கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு, மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம். வீடுகளில் மின் சாதன பொருட்களை, கவனமாக கையாள வேண்டும் என்று முதல்வர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.