பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியபோது அது தொடர்பாக மாநிலங்களுடன் ஒரு முறை கூட கலந்தாலோசிக்காத ஒன்றிய அரசு, இப்போது மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வித நியாயமும் இல்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று (மே 21) பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 8 மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 6 என்ற அளவில் குறைக்கப்படும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மாநிலங்களின் தொடர் கோரிக்கைக்கு பிறகே ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் எதிர்கொண்டு வரும் நிதிச்சுமையைக் குறைக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசால் கடுமையாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஒன்றிய அரசு இறுதியாக செவிசாய்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
2021ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைப்பதற்கு முன்பே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைத்தது. அதன் மூலம் லிட்டருக்கு 3 ரூபாய் என்ற வகையில் மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது.
‘பெட்ரோல், டீசலுக்கு 6 ஆண்டுகளில் 250% வரி உயர்த்திய ஒன்றிய அரசு’ – பிரியங்கா காந்தி கண்டனம்
இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,160 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். இருந்தாலும் முந்தைய அரசாங்கத்திலிருந்து வழிவழியாக வந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த வரி குறைப்பு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 2006-11 ஆண்டு ஆட்சிக் காலத்திலும் சாமானியர்களின் நலனுக்காக பெட்ரோல், டீசல் மீதான வரியை அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு குறைத்தது. மறுபுறம், கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
ஒன்றிய அரசின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு நிகராக மாநிலங்களுக்கான வருவாய் அதிகரிப்பு ஏற்படவில்லை. ஏனென்றால், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைத்த அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் மற்றும் உப வரியை ஒன்றிய அரசு உயர்த்தியது. 2014 ஆகஸ்ட் 1 அன்று ஒன்றிய அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 9.48 என்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 3.57 என்றும் இருந்தன.
2021ஆம் ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைப்பதற்கு முன்பு, பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உள்ளிட்ட வரி பெட்ரோல் மீது ரூ. 32.90 என்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 31.80 என்றும் இருந்தது. இது பெட்ரோல், டீசல் மீது முறையே ரூ. 27.90 மற்றும் ரூ. 21.80 என குறைக்கப்பட்டது. தற்போது மேலும் குறைத்து பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 19.90 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 15.80 ஆகியிருக்கிறது.
ஒன்றிய அரசு வரிகளை குறைத்தாலும், 2014ஆம் ஆண்டை விட வரிகளின் தொகை பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 10.42 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ 12.23 என்றே உள்ளது. எனவே, ஒன்றிய அரசு தனது வரியை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.
03.11.2021 அன்று ஒன்றிய அரசு அறிவித்த வரி குறைப்பால் தமிழ்நாட்டுக்கு ஆண்டு வருமானம் சுமார் ரூ.1,050 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. சமீபத்திய வரி குறைப்பு அறிவிப்பால் அந்த இழப்பு மேலும் ரூ.800 கோடி ஆகப்போகிறது. இது ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்று நிவாரண நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள செலவினத்தை எதிர்கொண்டுள்ள மாநிலங்களின் நிதிநிலைமை மீது மிகப்பெரிய சுமையாகி அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இந்த அரசாங்கம் (தமிழ்நாடு அரசு) ஆட்சிக்கு வந்தபோது முந்தைய அரசாங்கத்தால் விளைந்த ஆபத்தான நிதி நிலையை எதிர்கொண்டு, கோவிட் நிவாரண நடவடிக்கைகளுக்காக கூடுதல் செலவினங்களைச் செய்த போதிலும், பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்களின் நலனுக்காக பெட்ரோல் மீதான வரிகளைக் குறைத்தது. வரி விதிப்பு அதிகாரங்களை குறைவாகப் பெற்றுள்ள போதும் தமிழ்நாடு மாநில மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆனால், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, ஒன்றிய அரசு ஒரு முறை கூட அது பற்றி மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அதிகப்படியான வரி அதிகரிப்பு, தற்போது பகுதியளவு குறைக்கப் பட்டிருந்தாலும், அந்த நடவடிக்கை 2014 ஆம் ஆண்டு விகிதங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் அதிகமாகவே உள்ளது. எனவே, மாநிலங்கள் அவற்றின் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாக இல்லை என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தந்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Source : BBC tamil
ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.