“அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள்மீது பொய் வழக்குப் போடுவது, பிரதமர் நரேந்திர மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது” என்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாராயணசாமி, ‘பாரதிய ஜனதா கட்சியின் அங்கமாக செயல்படுகின்ற அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து அரசியல் கட்சித் தலைவர்களை மிரட்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர். அப்படித்தான் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவை யாவும் பிரதமர் நரேந்திர மோடியின் வக்கிர புத்தியையும், பழிவாங்கும் நடவடிக்கையுமே காட்டுகிறது. எதிர்க்கட்சிகள்மீது பொய் வழக்குப்போட்டு ஒன்றிய அரசு வெறுப்பு அரசியல் செய்து வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் விரைவில் அவர்கள் பக்கமே திரும்பும்
புதுச்சேரி மாநில மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார்பில் டெல்லியில் சென்று போராட்டம் நடத்த உள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து சமஸ்கிருதத்தை திணிக்கும் வேலையில் புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசும், ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கெனவே 6 மதுபான ஆலைகள் உள்ள நிலையில், மேலும் புதிய ஆலைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள்வரை பல நூறு கோடி லஞ்சம் பெற்றுள்ளனர்.
இந்த ஊழல் புகாரில் அதிகாரிகள் விரைவில் சிறைக்குச் செல்ல உள்ளார்கள். `ஊழலை வேடிக்கை பார்க்கமாட்டேன்’ என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் ஆளும் அரசின் ஊழலை வேடிக்கை பார்ப்பது ஏன்? ஊழல் அரசுக்கு தலைமை தாங்கும் நரேந்திர மோடி இனி ஊழலைப் பற்றிப் பேசக்கூடாது” என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
Source: hindu tamil
அடித்த கொள்ளையில் பங்கு வெளிவராத உண்மைகள் I Karikalan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.