ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் “ரமலான் இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாள் ஆகும். இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே 14 அன்று ரமலான் விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால் ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும். ஆகவே ரமலான் திருநாள் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதைக் கணக்கில் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
“ரமலான் தேதிகள் மாறுகிற பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது சி.பி.எஸ்.இ க்கு அழகல்ல எனச் சுட்டிக் காட்ட விழைகிறேன். ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதியுள்ள கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.