உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள்கொண்ட கொலீஜியம், ஜனவரி 17-ம் தேதி, அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய நீதிபதிகளை நியமனம் செய்யப் பரிந்துரை வழங்கியது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கெளரியும் ஒருவர். இவர் பாஜகவின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்திருக்கிறார்.
அப்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரசாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்களைச் செய்ததாக இவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. எனவே, இவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என மூத்த வழக்கறிஞர்கள் கொலீஜியத்துக்கு பிப்ரவரி 1-ம் தேதி மனு அளித்தனர். மேலும், இவருக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருக்கிறார்.
இன்று காலை 10:35 மணிக்கு விக்டோரியா கௌரி நீதிபதியாகப் பதவியேற்க இருக்கும் நிலையில், வழக்கு விசாரணையானது காலை 9:15 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கானது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட இருந்தது. பின்னர் இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, காலை 10:30 மணிக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விக்டோரியா கௌரி நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், “விக்டோரியா கௌரி சிறுபான்மையினருக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார் என்ற காரணத்தினாலே அவரின் நியமனத்தை எதிர்க்கிறோம்” என்று வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “அனைத்து விவரங்களையும் ஆய்வுசெய்த பின்னரே கொலீஜியம் நீதிபதியாக ஒருவரைப் பரிந்துரைக்கும். நீதிபதிகளை அவர்களின் சமூக வலைத்தள பதிவு அடிப்படையில் பின்தொடர முடியாது. அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாகப் பதவியேற்ற முன்மாதிரி உள்ளது” என்றனர்.
நீதிபதி கவாய், “நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சி தொடர்பில் இருந்திருக்கிறேன். ஆனால், நீதி வழங்கும்போது சார்பு இருக்கக் கூடாது. உத்தரவு, தீர்ப்பு வழங்கும்போது அரசியல் பார்வையைக் கொண்டுவந்ததில்லை. இது விக்டோரியா கெளரிக்கும் பொருந்தும்தானே” என்றார்.
ஒருவரை நீதிபதியாக நியமிக்கும்போது, கொலீஜியம் குறிப்பிட்ட நீதிமன்ற நீதிபதிகளிடம் கருத்துகளைக் கேட்கும். மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாமலா இருக்கும்… மேலும், நீதிபதிகள் சொல்லும் கருத்துகளை கொலீஜியம் ஆராயும். அனைத்து விவரங்களையும் ஆய்வுசெய்த பின்னரே கொலீஜியம் நீதிபதியாக நியமிக்க ஒருவரைப் பரிந்துரைக்கும். இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விக்டோரியா கௌரி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படும் முன் ஓராண்டுக்கு அவரின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும்” என விக்டோரியா கௌரி நியமனத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதனிடையே, சென்னையில் காலை 10:35 மணிக்கு விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.
Kalaignar is an Inseparable Part of Tamilnadu – Dr Kantharaj | Karunanidhi Pen Statue | Seeman | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.