Aran Sei

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ – திமுகவின் தேர்தல் வியூகம்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுக்க மக்களைச் சந்தித்து குறைகளை கேட்பதின் வழியாக வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான புதிய பிரச்சார வியூகத்தை திமுக அமைக்கவுள்ளது.

இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்தாண்டு அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். அதிமுக அரசின் ஊழல், திறமையின்மை மற்றும் அநீதிகளுக்கு மக்கள் பலிகடா ஆகிவருகின்றனர். இது போதாதென்று, கரோனோ பெருந்தொற்றும் விவசாயிகள், தினக்கூலிப் பணியாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் : கொரோனா அடைப்புக்கு பிறகு நம்பிக்கை ஊட்டிய வரவேற்பு – ஷியாம் சுந்தர்

தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறக் கூட எந்த ஒரு வழியும் இல்லாமல், பத்தாண்டுகளாக தங்கள் அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றாத அரசின் மீது சாமானிய மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் அதிமுக ஆட்சி மக்களை அலட்சியம் செய்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை எளியோருக்கும் உதவுவதிலும், எளியோரின் குரலை ஓங்கி ஒலிப்பதிலும் திமுக என்றுமே தவறியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

‘ஒன்றிணைவோம் வா’ தொடங்கி, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்’ வரை தமிழக மக்கள் திமுகவினரைத் தொடர்ந்து நேரடியாகச் சந்தித்துள்ளதை சுட்டிக்காட்டிய அறிக்கை.  “தங்களது பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க திராவிட முன்னேற்றக் கழகத்தால்தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களை திமுகவிடம் அளித்து வருகின்றனர். இச்சூழலில்தான், திமுக தலைவர் ஸ்டாலின், “ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி.” என்று ஸ்டாலின் கூறியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பீமா கோரேகான் செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள் – இந்தியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்

“எனது அரசின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு” என்ற உறுதிமொழியை மக்களுக்கு நேரில் அளிக்கும் பொருட்டு – ஜன.29 அன்று முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் சந்திப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 30 நாட்களில் தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களை திமுக தலைவர் நடத்தவுள்ளதாகவும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற ஒவ்வொரு கூட்டத்திலும், அத்தொகுதியைச் சேர்ந்த எந்த கிராமம் அல்லது வார்டினைச் சேர்ந்த யாரும் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளை ஸ்டாலினிடம் நேரடியாகப் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புரட்சியின் கப்பல் போட்டம்கின்” – 95 ஆண்டுகள் கடந்தும், சிறந்த படங்களின் பட்டியலில் நீடிக்க காரணம் என்ன?

இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரச்சினைகள் அடங்கிய மக்களின் மனுக்கள் பெறப்பட்டு – பதிவு செய்யப்பட்டுத் தனித்தனிப் பதிவு எண்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களின் பிரச்சினைகளைக் குறித்துக் கலந்துரையாடுவார் என்றும் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டங்களில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாதோர், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ; பிரத்யேக இணையதளம் (www.stalinani.com) வாயிலாகவோ; 91710 91710 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோ, தங்கள் பிரச்சினைகளைப் பதிவு செய்யலாம் என்றும் திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ – திமுகவின் தேர்தல் வியூகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்