Aran Sei

’செஞ்சூரி அடிக்கும் பெட்ரோல் விலை; மக்களுக்கு பிரதமர் வழங்கும் கொடுமையான பரிசு’ -ஸ்டாலின் விமர்சனம்

பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது, டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது, சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது என்றும் இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் வைத்து, பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மதுரை “எய்மஸ்” மருத்துவமனையின் நிலை என்னவென்று அறிந்த தமிழக மக்கள், பிரதமரின் புதிய அறிவிப்புகளின் தன்மையையும் தரத்தையும் நன்கு அறிவார்கள். அவர் வாயால் அறிவிக்கப்படாத ‘பரிசாக’ கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

‘வானளவு உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை’ – நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்

“பொதுமக்கள் பயன்படுத்தும் மானியத்துடனான சமையல் கேஸ் சிலிண்டருக்கு கரோனா காலத்தில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் விலை உயர்த்தி, வதைபடு படலத்தைத் தொடங்கிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தற்போது மானியமில்லாத சிலிண்டர் விலையையும் ரூ.50 உயர்த்தி தேநீர்க்கடை, சிறு உணவகம் போன்ற எளிய மக்களின் வணிகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.” என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விற்பனையானபோது, ரூ.450 முதல் ரூ.500குள்ளான விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டது. அதற்கே பாஜகவினர் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், அதை வேண்டுமென்றே கணக்கில் கொள்ளாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸ்  விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ பெட்ரோல், டீசல் விற்பனையில் கொள்ளை அடிக்கும் மத்திய அரசு, ரூ 38-க்கு பெட்ரோல் வேண்டும் ’ – கே.எஸ்.அழகிரி

“தற்போது 750 ரூபாய்க்கும் அதிகமாக சமையல் கேஸ் சிலிண்டருக்கு விலை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு மக்களைத் தள்ளியுள்ளது பாஜக அரசு. பெட்ரோல் விலை ‘செஞ்சுரி’ அடிக்கப்போகிறது. டீசல் விலை அதனைப் பின் தொடர்கிறது. சமையல் கேஸ் விலை விண்ணைத் தொடுகிறது. இந்திய மக்களுக்கு, பிரதமரும் அவரது அமைச்சரவையும் தருகின்ற கொடுமையான பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இத்தகைய பரிசுகள் தேவையில்லை என்றும் அவர்கள் நிம்மதியாக வாழும் வகையில், வரிவிதிப்புகளைக் குறைத்து, விலையேற்றத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

’செஞ்சூரி அடிக்கும் பெட்ரோல் விலை; மக்களுக்கு பிரதமர் வழங்கும் கொடுமையான பரிசு’ -ஸ்டாலின் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்