மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை, மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், புதுச்சேரி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டே இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, இன்று (ஜனவரி 22) ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என்று புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு : தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அனைத்தும் ஓரணியில் நின்று, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது, கல்வியின் தரத்தைப் பாதிக்கும்” என்று, ‘தரத்தைப்’ பற்றி நீண்டகாலமாக, பொதுவெளியில் வைக்கப்படும் சொத்தை வாதத்தை, சென்னை உயர் நீதிமன்றத்திலும் முன்வைத்திருப்பது, மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும் என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் புதுச்சேரி மாநில அரசு வழங்க முன்வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் தடுத்து நிறுத்திட, அம்மாநிலத் துணைநிலை ஆளுநருடன் சேர்ந்து சூழ்ச்சி செய்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
7.5% இடஒதுக்கீடு : தமிழக அரசு ஆணையைத் தொடர்ந்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
“குறிப்பாக, “இந்த ஆண்டு அந்த இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை” என்று மத்திய பாஜக அரசு வாதிடுவது, அக்கட்சித் தலைமையிலான ஆட்சிக்கு, சமூக நீதிக் கொள்கைகள் மீதும் – இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் மீதும் – பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்று முன்னேற மேற்கொள்ளும் முயற்சிகளின் மீதும் – இருக்கும் நீங்கா வெறுப்புணர்வைக் காட்டுகிறது.” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு போல் ஒருபுறம் வேடம் போட்டு, இன்னொரு புறம், ஏதாவது ஒரு வகையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்து விடத் துடிக்கிறது மத்திய அரசு என்றும் நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்து, சமூக நீதியை எப்படியெல்லாம் காயப்படுத்திச் சாய்த்திட முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அதிகாரத்தை பயன்படுத்திய தமிழக அரசு – 7.5% இடஒதுக்கீடு உறுதியானது
“தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டை வழங்காமல் மாநில ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். திமுகவின் போராட்டத்தாலும் – உயர் நீதிமன்றத்தின் உத்தரவாலும் – நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.” என்றும் ஸ்டாலின் நினைவுக்கூர்ந்துள்ளார்.
`நீட் மற்றும் 7.5 % இட ஒதுக்கீட்டில் அடிமை அரசின் நாடகங்கள்’ – விளக்கும் ஸ்டாலின்
“தமிழக ஆளுநரின் அந்தச் செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ள கருத்துரையில், “நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது (in consonance with the Constitution of India)” என்று மிகத் தெளிவாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான் ஆளுநர், தமிழக அரசின் மசோதாவிற்கு 30.10.2020 அன்று ஒப்புதல் அளித்தார்.” என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தமிழக அரசின் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலே கூறியிருக்கும்போது, அவரின் கீழ் பணிபுரியும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டரும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் எப்படி புதுச்சேரி மாநில அரசு வழங்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபாடான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு சாத்தியமா? – சீ.நவநீத கண்ணன்
தமிழக மசோதா தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றமே தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்டது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“இந்நிலையில் – புதுச்சேரி மாநில விவகாரத்தில் இப்படியொரு நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்து – தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் போராடிப் பெற்ற 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அடிப்படையான சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் அப்படியொரு விபரீத விளையாட்டை நடத்திடக் கனவிலும் நினைக்கக் கூடாது.” என்று அவர் எச்சரித்துள்ளார்.
தமிழக மருத்துவக் கலந்தாய்வு பட்டியலில் வெளி மாநிலத்தவர்கள் எப்படி நுழைந்தனர் ? – ஸ்டாலின் கேள்வி
தமிழகத்திலும் – புதுச்சேரியிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மீது – குறிப்பாக, மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், புதுச்சேரி மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டே புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
`சித்த மருத்துவத்திற்கு மத்திய, மாநில அரசு என்ன செய்தது?’- உச்ச நீதிமன்றம்
மேலும், “விளம்பர மோகத்தில்” மயங்கிக் கிடக்கும் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு, மிகவும் விழிப்புடன் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.