கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் நேற்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் ஆஜராகி, “இந்த மனு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும். இல்லாவிடில் ஹிஜாப் தடையை ரத்து செய்துவிட்டு, இவ்வழக்கை நிதானமாக விசாரிக்கலாம்” வாதிட்டார்.
அதற்குத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “இந்த வழக்கை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும். தற்போது ஒரு நீதிபதிக்கு உடல்நிலை சரி இல்லை. அந்த அமர்வு ஹிஜாப் விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும். அதுவரை ஹிஜாப் தடையை ரத்து செய்ய முடியாது” எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.