மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை சபாநாயகர் நியமனத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய மகாராஷ்ட்ரா காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சபாநாயகர் பதவியில் இருந்து நானா படோலே ராஜினாமா செய்ததால் காலியான அப்பதவி, இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. நானா படோலே தற்போதைய மகாராஷ்ட்ரா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ளார்.
முன்னதாக, மகாராஷ்ட்ராவை ஆளும் மகா விகாஸ் அகதி கூட்டணியில் உள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஒப்பந்தத்தின்படி சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு அளிக்கப்பட்டது.
முந்தைய சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரிலும் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை. இம்முறை, சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை விதிகளை மகா விகாஸ் அகதி கூட்டணி கட்சிகள் திருத்தியபோது, “இச்செயல் அரசியலமைப்புக்கு முரணானது” என கூறி, அதற்கு ஆளுநர் பகத் சிங் கோஷேரி உடன்படவில்லை.
சபாநாயகர் நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “ஒருவேளை, கூட்டணி கட்சிகள் சபாநாயகர் தேர்தலை முன்னெடுத்திருந்தால், ஆளுநர் அதை அரசியலமைப்பு நெருக்கடி நிலையாக எடுத்துக்கொண்டு, மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி இருக்கக் கூடும். ஆகவேதான், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசாங்கத்தை சிக்கலில் மாட்ட வைக்க வேண்டாம் என்று கூட்டணி தலைவர்கள் முடிவு செய்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் காங்கிரஸ் தலைவர் சோனியா உறுதியாக இருக்கிறார். சபாநாயகர் தேர்தல் ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்பதை அவர் அறிய விரும்புகிறார். இதுதொடர்பாக, கட்சி தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.