முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநர், அதிமுக அரசு மூவரும் கபட நாடகம் நடத்துவதாக மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: “பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை செப்டம்பர் 9, 2018இல் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை 29 மாத கால தாமதத்திற்குப் பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்து இருக்கின்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், ஏழு தமிழரின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரே முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.
தமிழக ஆளுநரின் முடிவுக்கு மத்திய பாஜக அரசின் பின்னணி இருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது என்று குற்றஞ்சாட்டிய வைகோ, ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய பாஜக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 2018, செப்டம்பர் 6இல் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161ஆவது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பளித்ததை நினைவுகூர்ந்தார்.
கடந்த செப்டம்பர் 9, 2018இல் தமிழக அரசு ஏழு பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியதையும், ஆளுநர் தமிழக அமைச்சரவையின் தீர்மானம்குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க அனுப்பியதாகத் தகவல் வந்ததையும் அறிகையில் கூறியுள்ளார்.
எழுவர் விடுதலைக்கு மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
“ஏழு பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 2019, மே 9ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநர் முடிவெடுக்க அறிவுறுத்தியது. அதன் பின்னரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை” வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163 (1)-ன்படி தமிழக அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு இருக்கிறதே தவிர, ஆளுநர் இதில் தனிப்பட்ட முடிவு எதையும் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்று கூறிய அவர், ”தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஏழு தமிழர் விடுதலை பற்றிக் குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருப்பது அநீதியாகும். மத்திய பாஜக அரசும், தமிழக ஆளுநரும், அதிமுக அரசும் இந்தக் கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது” என்றும் தெரிவித்துள்ளார்.
எழுவர் விடுதலை: ‘ஆளுநரின் அறிவிப்பு மக்கள் உணர்வை அவமதிக்கும் அரக்கத்தனம்’ – முத்தரசன் விமர்சனம்
“நாட்டின் சட்டத்தையும், நாடாளுமன்ற நெறிமுறைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்காமல், அலட்சியப்படுத்தி வரும் ஒரு கூட்டத்தின் கையில் அரசு அதிகாரம் சிக்கிக் கொண்டதன் விளைவை நாடு சந்தித்து வருகின்றது. மத்திய பாஜக அரசு – தமிழக ஆளுநர் – எடப்பாடி பழனிசாமி அரசு மூவர் கூட்டணியின் சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரான அராஜகப் போக்கைத் தமிழக மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, 29 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று நடத்துவதாக மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.