விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, ஜனவரி 21 முதல் விவசாய சட்டங்கள் குறித்து முழுமையான கருத்துக்களை அறிய, மாநில அரசுகள், மாநில விவசாய சந்தைப்படுத்தல் வாரியங்கள், விவசாய சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், டெல்லி எல்லைகளில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களை, மீண்டும் டெல்லி காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து பேசியுள்ளனர் என்றும் அப்போது, விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியை டெல்லிக்கு வெளியே உள்ள அதிவிரைவு சாலையில் நடத்துவது நல்லது என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்றும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு – மத்திய அரசு திடீர் அறிவிப்பு
நேற்று (ஜனவரி 19), உச்ச நீதிமன்றம் நியமித்த குழு தன் பணிகளைத் தொடங்கியுள்ளது. விவசாய சட்டங்கள் குறித்து பரந்த அளவிலான ஆலோசனைகளை நடத்தும் திட்டமும், இணைய வழியாகவும் கருத்துக்களை பெறும் திட்டமும் அந்த குழுவால் செயல்படுத்தப்படவுள்ளது.
அந்த குழுவின் உறுப்பினரான, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் முன்னாள் இயக்குநரான பிரமோத் குமார் ஜோஷியிடம், நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படாததால், அதை ஈடுசெய்யும் வகையில் இந்த அலோசனை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை தான் பின்பற்றுவதாகக் அவர் கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தில் இணைய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு – மேஜர் ஜெனரல் சத்பீர் சிங்
மேலும், “இது சட்ட ரீதியான செயல்பாட்டின் ஒரு பகுதிதான். அதில் நாங்கள் நுழையத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டது. எனவே, ஆலோசனை முன்னர் நடைப்பெற்றதா இல்லையா என்பது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது. எங்கள் வேலை என்பது, மூன்று விவசாய சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுவது, மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், மாநில விவசாய பொருட்களின் விற்பனை வாரியங்கள், கூட்டுறவு சங்கங்கள் என்று எல்லோரையும் சந்திப்பது. முதற்கட்டமாக சந்திக்கவுள்ளவர்களின் பட்டியல் புதன்கிழமை (ஜனவரி 20) இறுதி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அதற்கான அழைப்புகள் வியாழன் (ஜனவரி 21) அனுப்பப்படும்.” என்று பிரமோத் குமார் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
’டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணி தடைகளை தாண்டி நடக்கும்’ : விவசாய சங்கங்கள் திட்டவட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களையும் நாங்கள் அழைக்கவுள்ளோம் என்று கூறியுள்ள பிரமோத் குமார் ஜோஷி, “நாங்கள் அரசின் குழுவல்ல. உச்ச நீதிமன்றத்தின் குழு. அதனால், எங்கள் அழைப்பை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்கள், இந்த குழுவை சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் மத்திய அரசுடனான நேரடி பேச்சுவார்த்தையை தொடர விரும்புகின்றன. பல விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பத்தாவது சுற்று பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி: போலி செய்தியை வெளியிட்ட நியூஸ் 18
இதுகுறித்து பேசிய கிராந்திகரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால், “எங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் உள்ளது. விவசாய சட்டங்களை நீக்க வேண்டும் என்பது தான். டிராக்டர் பேரணி தொடர்பாக, டெல்லி காவல்துறை அதிகாரிகளை சந்தித்தபோது, டெல்லிக்கு வெளியே புறநகரில் உள்ள அதிவிரைவு சாலையில் பேரணி நடத்துமாறு பரிந்துரைத்தனர். ஆனால் நாங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டோம். இந்த வார இறுதியில் மீண்டும் அவர்களுடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறலாம்.” என்று கூறியதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.