சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்,” ஆளுநரின் உரை இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு மிகவும் நெருக்கமான பாடலாக கருதப்படும் ஹரிவராசனம் பாடல் எழுதப்பட்டு நூறு வருடங்கள் ஆகும் நிலையில், சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆன்மீகப் பெரியோர்கள் ஐயப்ப பக்தர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
தமிழக ஆளுநர் ரவி பேசியதாவது, ‘’ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். ஒரே பரமேஸ்வரா! ஒரே கடவுள்! அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதைத்தான் நமது மார்க்கம் கூறுகிறது. மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு என்பது அவசியமாகிறது. இந்திய அரசியலமைப்பு தான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. தர்மம் என்பது மத சம்பந்தப்பட்டது அல்ல. அனைவரையும் உள்ளடக்கியது. கிமு 2ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை. சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது. ஒரே பரமேஸ்வரா என்று சனாதன தர்மம் சொல்கிறது. அந்த பரமேஸ்வரன் தான் உலகத்தை படைக்கிறார். நம் வேற்றுமையில் வாழ்கிறார் எனக் கூறப்படுகிறது. ஒரு மரம் என்றால் அதில் எண்ணற்ற இலைகள் உள்ளது. அந்த இலைகளுக்கும் மரத்திலிருந்து சத்துக்கள் செல்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்திய அரசியலமைப்பின் சாராம்சமாக உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு தான் அரசிற்கு ஆதாரமாகவும் ஆன்மாவாகவும் உள்ளது. பாரதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போது நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. ’ஏகம் சத் விப்ரா பஹுதா’ வதந்தி என அத்வைத தத்துவங்கள் கூறுகின்றன.
மற்ற நாடுகளைப் போல ராணுவவீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாடு உருவாகவில்லை. இந்த நாடு ரிசிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. கடவுள் மனிதனைப் படைத்தார் எனும் தத்துவத்தை இந்து மதம் சொல்லவில்லை. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தில் வளர்ச்சியைப் போல ஆன்மிகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகளும் முன்னேற்பாடுகள் செய்யாத நிலையில், அதை தடுப்பதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளது.
இந்தியா வல்லரசு நாடாக வளர்ந்துவரும் நிலையில் அதன் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாகவும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாகவும் இருக்கவேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்த தேசத்தின் வளர்ச்சி ஆகும். சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து காந்தகார் பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால் அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமையை’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா: ஹிஜாப்பை தொடர்ந்து தொப்பி அணிய தடை கேட்கும் வலதுசாரிகள்
இது குறித்து அரண்செய்யிடம் பேசிய ஊடகவியலாளர் ஜீவசகாப்தன், தமிழ்நாட்டு ஆளுநரின் உரை தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. அல்லும் பகலும் பாடுபட்டுத் தன்னுடைய உயிரை உருக்கி டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனத்தை எழுதினார். அரசியலில் மதம் தலையிடக் கூடாது என்று கருதியவர் டாக்டர் அம்பேத்கர். அவரின் சட்டத்தை சனாதானிகள் கடுமையாக எதிர்த்தனர் என்பதுதான் வரலாறு. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர் படித்தால் சாபமிடுவதுதான் ரிஷிகளின் வேலையாக இருந்துள்ளது. சம்பூகன், ஏகலைவன் கதைகள் எல்லாம் நாம் அறிவோம். ஆளுநர் தன்னுடைய வேலையைத் தவிர்த்து பிற வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் இப்படி தொடர்ந்து பேசினால் சமூக நீதியில் நம்பிக்கையுள்ள ஊடகர்கள் மக்களுக்கு ஆளுநரை இன்னும் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாடு இன்னும் அரசியல் பிரக்ஞை உள்ள மாநிலமாக மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கருக்கு எதிராக கலவரம் செய்த சாதிவெறியர்கள் | Amalapuram Ambedkar Issue
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.