இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை நிதியமைச்சரிடம் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று(ஜனவரி 15), ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷாவுடன் காணொளி வழியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
இது குறித்து, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்திருக்கிறார். கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக இலங்கை அரசு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தேவையான உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்யும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
“இந்த நேரத்தில், உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்காக இந்தியா வழங்கும் ரூ.7,438 கோடி கடன் மற்றும் ரூ.3,719 கோடி மதிப்பிலான எரிபொருளை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வது ஆகியவை குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர். இலங்கையில் துறைமுகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், எரிசக்தி, மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களில் இந்தியா முதலீடு செய்வதற்கு இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷா நன்றி தெரிவித்தார்” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப் பட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
இலங்கை சிறையில் 68 இந்திய மீனவர் சிறையடைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில், 13 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Source: New Indian Express, The Hindu.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.