டெல்லியில் உள்ள குதுப்மினார் கோபுரத்தை குதுப்-அல்-தீன் ஐபக் மன்னர் கட்டவில்லை. சூரியதிசையை அறிந்து கொள்ள மன்னன் விக்ரமாதித்யா கட்டிய சூரியக் கோபுரம்தான் குதுப்மினார் எனச் சர்ச்சைக்குரியத் தகவல் ஒன்றை இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய மசூதிகள் மற்றும் புராதனச் சின்னங்கள் மீது இந்துத்துவா அமைப்புகளால் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இதில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் கியானவாபி மசூதி, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி, ஆக்ராவின் தாஜ்மகால் மற்றும் ஜுமா மசூதி ஆகியவற்றின் வரிசையில் டெல்லியின் குதுப்மினாரும் இடம்பெற்றுள்ளது.
“குதுப்மினார் கோபுரத்தை டெல்லியின் சுல்தான்களில் ஒருவரான குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டதில்லை” என்று ஒன்றிய அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான தரம்வீர் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியிலிருப்பது குதுப் மினார் அல்ல. அது குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டதல்ல. அது, 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது. சூரியன் இடம் மாறும் திசையை அறியக் கட்டியதால் அதன் பெயர் சூரியக் கோபுரம் ஆகும். இந்தியத் தொல்லியல் துறை சார்பில் நான் அங்கு ஆய்வு செய்தபோது அதற்கான பல ஆதாரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன.
இந்த சூரியக் கோபுரம் செங்குத்தாக இல்லாமல் 25 அங்குலம் அளவில் சாய்ந்திருக்கும். இந்த சாய்வானது சூரியனின் திசையை அறிய அமைக்கப்பட்டது. ஜூன் 21 அன்று அரை மணி நேரத்திற்கு அதன் நிழல் கீழே விழாது. அறிவியல் ரீதியாகக் கட்டப்பட்ட அந்தக் கோபுரம் ஒரு தொல்பொருள் சான்றாகும். அந்த கோபுரம் ஒரு தனிக்கட்டடமே தவிர அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்தத் தொடர்பும் கிடையாது” என அந்த அறிக்கையில் தரம்வீர் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லியின் மெஹரோலி பகுதியில் வரலாற்றுச் சுற்றுலாத் தலமாக குதுப்மினார் அமைந்துள்ளது. இது, டெல்லி சுல்தான் வம்சத்தின் முதல் மன்னரான குதுப்-அல்-தீன் ஐபக்கால் 1198 -ல் தொடங்கப்பட்டது.
தற்போது, ஒன்றிய அரசின் தொல்லியல் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அதன் நுழைவாயிலில் ’குவ்வத்தூல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சக்தி) எனும் பெயரிலான மசூதி ஒன்று அமைந்துள்ளது.
இஸ்லாமியர்களால் தொழுகை நடத்தப்பட்டு வரும் இந்த மசூதியானது 27 இந்துக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக டெல்லி நீதிமன்றங்களில் பாஜக மற்றும் பல இந்துத்துவா அமைப்பினர் வழக்குகள் தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : indiatoday
காசி ஆனந்தனின் தியாகத்தை கொச்சை படுத்த முடியாது | Thiruma Speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.