உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறியதாக கோபிகஞ்ச் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், “நுபுர் சர்மாவுக்கு ஒட்டு மொத்த இந்து சமூதாயமும் ஆதரவளித்து வருகிறது. அவருக்கு பாஜக மரியாதை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
கடந்த வாரம் நபிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் டெல்லி மாநில செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரை பாஜக நீக்கியது.
நபிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டங்களின் போது ஏற்பட்ட கலவரம் மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர். மேலும், கலவரத்தை அடக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
பதோஹி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கபட்டுள்ளது என்று அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் தெரிவித்துள்ளார்.
“இந்த ஊர்வலத்திற்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை, இது தொடர்பாக கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் காணொளியின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.
வீடியோ மூலம் இதுவரை 25 உள்ளூர்வாசிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: The Hindu
மிரட்டும் திமுக பதுங்கும் Subramanian Swamy | Haseef | Makizhnan | Periyar | DMK | MK Stalin
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.