முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, சுயநலத்திற்காக, விவசாயச் சட்டத்தை நிறைவேற்ற ஆதரித்ததற்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன் என்றும் இதற்காகத் தமிழக விவசாயிகள் சார்பில் உங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் டெல்லி விவசாய போராட்டத்தில் கலந்து கொண்ட பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 26) டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் போராட்ட மேடையில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் குடியரசு தின டிராக்டர் பேரணி : அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு
அதில், ”டெல்லியில் நடைபெற்று வருவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். இதற்குத் தமிழகத்தில் இருந்து விவசாயிகள் சார்பாக ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கே நான் வந்திருக்கிறேன். அதானிக்கும், அம்பானிக்கும் மோடி போராடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயல்கிறார். காந்தி பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தைப் பறிகொடுக்கப் போராடுகிறார்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“ஆனால், விவசாயிகள் நடத்துவது 120 கோடி மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம். அரசியலமைப்புச் சட்டத்தையும் காந்தி பெற்ற சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகப் போராட்டம் நடத்துகிறோம். உங்கள் போராட்டத்திற்குக் குமரி முதல் காஷ்மீர் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களும் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துகிற உங்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருக்கிறது. ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராடி வருகிறோம். தொடர் போராட்டங்களில் 60 தினங்களாக ஈடுபட்டு வருகிறோம்.” என்று பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அதே நேரத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இந்தச் சட்டத்திற்கு ஆதரவளித்திருக்க மாட்டார். ஆனால், அவரது மறைவையொட்டி முதல்வரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, சுயநலத்திற்காக, இந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆதரித்தது. இதற்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன். இதற்காகத் தமிழக விவசாயிகள் சார்பில் உங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கிறேன்.” என்று அவர் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.
விவசாய சட்டத்தைக் கைவிட்டு மக்களுக்காக மோடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல் மோடியை மாற்றுவதற்கு இந்திய விவசாயிகள் தயாராகி விட்டார்கள் என நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்றும் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் குழுவினர் தமிழில் பாடி ஆதரவு
தமிழகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுப்பதும், டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ளும் விவசாயிகளைக் காவல்துறையைக் கொண்டு தடுக்க முயல்வதும் கண்டிக்கத்தக்கது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.