இன்றோடு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஆண்டாவது பணிகள் தொடங்கப்படுமா என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறைச் செயலாளரையும் இணைச்செயலாளரையும் சந்தித்துப் பேசியதாக கூறிய அவர்,. ரூ.1200 கோடி திட்டம் ரூ.2000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான முழுமையான விளக்கத்தை அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த உயர்வுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டும் என்றும் அதுவும் உடனடியாக நடக்குமா என்ற கேள்விக்கும் முழுநம்பிக்கையான பதில் கிடைப்பதில் சந்தேகம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு இத்திட்டத்தை இன்றுவரை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை என்றும் தன்னிடம் உள்ள நிலத்தை மத்திய அரசுத்துறைக்கு வகை மாற்றித்தருவதற்க்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துச் சாதனைபுரிந்துள்ளது அதிமுக அரசு என்றும் கூறியுள்ளார். “பலமுறை நினைவுபடுத்தியும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிட்டும் அவர்களை இயங்கவைக்க முடியவில்லை. மதுரை எய்ம்ஸ்சோடு இணைந்து அறிவிக்கப்பட்ட ஜம்மு, மங்களகிரி, பீபீ குளம் எம்ய்ம்ஸ்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் மதுரை எய்ம்ஸ் இன்னும் தொடக்கப்பணியே நடக்காமல் அப்படியே நிற்கிறது” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “மாநில அரசின் பொறுப்பின்மையின் உச்சமென இவற்றைச் சொல்லலாம். மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்க 300 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையையும் கட்டிடங்களையுங் கொடுத்துப் பணிகளை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்புக்கொண்ட மாநில அரசு இதனைப்பற்றி துளியளவும் கண்டுகொள்வதில்லை. மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான சிறப்பு அலுவலரை நியமியுங்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம்; அதனை நிறைவேற்ற மறுக்கிறது. கடந்த வாரம் டில்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரிடமோ, சுகாதாரத்துறை அமைச்சரிடமோ, நிதியமைச்சரிடமோ இதனைப்பற்றி ஒரு வார்த்தை பேசியதாகத் தெரியவில்லை” என்றும் சு.வெஙடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காண்டு சிறைவாசத்துக்கு பின்னர் சசிகலா இன்று விடுதலை – அரசியல் விளைவு என்ன?
“தமிழகத்துக்கு வர இருக்கிற முதல் எய்ம்ஸ், அதுவும் குறிப்பாக தென்தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும்பலனைக் கொடுக்க உள்ள மிகப்பெரிய திட்டம் பற்றி மாநில முதலமைச்சருக்கு சிறிதாவது அக்கறை வேண்டாமா? எட்டுவழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தக் காட்டிய வேகத்திலும் முனைப்பிலும் பத்தில் ஒரு பகுதியாவது மதுரை எய்ம்ஸ்க்குக் காட்டியிருந்தால் இந்நேரம் எய்ம்ஸ்கான பணி பலமடங்கு முன்னேறியிருக்கும்” என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் அதிகாரிகளோ, மாநில அரசின் ஒத்துழைப்பின்மையை காரணமாகச்சொல்லி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கப்பார்க்கிறார்கள் என்றும் பிரதமர் அடிக்கல்நாட்டி இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் தார்மீக ரீதியாக தனக்குள்ள பொறுப்பினை நிறைவேற்ற மத்திய அரசு மறுப்பதாகவும், கடந்த ஜூன் மாதம் கையெழுத்தாக வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகமலேயே காலம் சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இனியும் காலந்தாழ்த்தாமல் மத்திய அமைச்சரவை எய்ம்ஸ்க்கான திட்டமதிப்பீட்டு உயர்வுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். மார்ச்சுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவேண்டும். வரும் கல்வியாண்டிலாவது மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். மாநில அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவை எல்லாம் நமக்கு முன்னால் இருக்கும் உடனடிப்பணிகள்” என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
டெல்லி வன்முறைக்கு மத்திய அரசே பொறுப்பு – மம்தா பானர்ஜி, சரத் பவார் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எய்ம்ஸ் பிரச்சனையை முதன்மைப் பிரச்சனைகளில் ஒன்றாக எழுப்ப உள்ளதாகவும், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக, தொழில் துறை அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் என அனைவரும் இக்கோரிக்கைகளின்பால் அழுத்தம் கொடுத்து மார்ச் மாதத்தில் பல்வேறு வகையான இயக்கங்களை நடத்த முன்வரவேண்டும் என்றும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலத்தில் கொடுக்கும் அழுத்தந்தான் இத்திட்டத்துக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலைப் பெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழிவகுக்கும் என்று மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.