பாலஸ்தீனத்தின் ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில் பெடோயின் எனப்படும் அரேபிய நாடோடி மக்கள் வசிக்கக்கூடிய ஹம்ச அல் பாக்குவாய் பகுதியில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலினால் விவசாய நிலங்கள், வாழ்விடங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளதாகவும், ஏறத்தாழ 65 பேர் அந்த இடத்தை விட்டு வெளியுள்ளதாகவும் மேற்குக் கரை பாதுகாப்பு கூட்டமைப்பைச்(டபிள்யு.பி.பி.சி) சார்ந்த கிறிஸ்டோபர் ஹோல்ட் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
மேலும், முன்னர் நடந்த தாக்குதல்களில் சேதமடைந்த வீடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியால் மேற்குக் கரை பாதுகாப்பு கூட்டமைப்பு கட்டிகொடுத்த நிலையில், தற்போது நடந்துள்ள தாக்குதலால் மீண்டும் அவர்கள் வீடடற்றவர்களாக மாறியுள்ளதாகவும் அல் ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒஸ்லோ அக்கார்ட் பகுதியின் 60% பகுதி இஸ்ரேலியப் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 2020 லிருந்து தற்போது வரை இந்தப் பகுதி 7 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக நோர்வே அகதிகள் கவுன்சில் (என்.ஆர்.சி) கூறியுள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளில் நடந்த ஒரே தாக்குதலில் 83 கட்டுமானங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டது என்று அல் ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் அரசு அப்பகுதி மக்களை சட்டவிரோதமாக வெளியேற்ற முயற்சித்து வருவதாகவும், ஆனால், மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற மறுத்து வருவதாகவும் மேற்குக் கரை பாதுகாப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஹோல்ட் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.