குஜராத் பாலம் விபத்து காரணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது குஜராத் சென்றுள்ள நிலையில், திடீரென ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் கட்டப்பட்டது. கடந்த 1879ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் இத்தனை ஆண்டுகளாகப் பயன்பாட்டில் தான் இருந்தது.
இந்தாண்டு தொடக்கத்தில் தான் பராமரிப்பு பணிகளுக்காக இந்த பாலம் மூடப்பட்டது. சுமார் 7 மாதங்களாகப் பாலத்தின் பராமரிப்பு பணிகள் நடந்தன.
குஜராத்: மோர்பி பால விபத்து ஊழல் நிறைந்த பாஜக அரசால் நிகழ்த்தப்பட்ட கொலை – ஆம் ஆத்மி கட்சி விமர்சனம்
இதையடுத்து கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இந்த பாலத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் இந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்து மிக மோசமான விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது 140 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என அஞ்சப்படுகிறது. இந்த விபத்திற்குக் குஜராத் அரசு பொறுப்பேற்றுள்ளது. ஒன்றிய மாநில அரசுகள் உயிரிழந்தோருக்கும் காயமடைந்தோருக்கும் நிவாரணத்தை அறிவித்து உள்ளது. இந்த பாலம் அதிகபட்சமாக 125 பேரின் எடையைத் தான் தாங்க முடியும். இருப்பினும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுமார் 500 பேர் வரை பாலத்தில் அனுமதித்து உள்ளனர். இதுவே விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருந்து உள்ளது.
பிரதமரின் சொந்த மாநிலத்தில் இந்த விபத்து நடந்ததால், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார். மேலும், தனது பிரசார நிகழ்வுகளையும் முழுமையாக ரத்து செய்தார். இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து இருந்த பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குஜராத் சென்றார். மேலும், காயமடைந்தோரையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கிறார்.
பிரதமர் மோடி குஜராத்திற்குச் செல்லும் நிலையில் சமூக வலைத்தளங்களில் திடீரென Go_Back_Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக ஆரம்பித்தது. எப்போதும் பிரதமர் மோடி தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்குச் செல்லும் போது தான் இது போன்ற ஹேஷ்டேக் டிரெண்டாகும். ஆனால், இப்போது மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குச் செல்லும் போது இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ட்விட்டர் தரவுகளின்படி பிற்பகல் வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்கள் Go_Back_Modi என்ற ஹேஷ்டேகில் பதிவிடப்பட்டு இருக்கிறது. பிரதமர் வருவதால் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை புனரமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில், அதை விமர்சித்தே பலரும் இந்த ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர். வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் நாட்டை விற்பதில் கவனம் செலுத்தினால் இதுதான் நடக்கும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
திமுகவின் ராஜீவ்காந்தி, பிரதமரின் சொந்த மாநிலத்திலிருந்தே ஹேஷ்டேக் ட்ரெண்டவதாக கூறியிருக்கிறார். அதேநேரம் மறுபுறம் பாஜக ஆதரவாளர்கள் மற்றொரு ஹேஷ்டேக்கை உடனடியாக டிரெண்டாக்கினர். GujaratWithModiJi என்ற அந்த ஹேஷ்டேக்கில் இதுவரை 15000 மேற்பட்டோர் கருத்து பதிவிட்டு உள்ளனர்.
எப்போதும் குஜராத் பிரதமர் மோடியுடன் தான் இருக்கும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். மேலும், கடந்த காலத்தில் பெரிய வெள்ளம் வந்த போது உடனடியாக களத்தில் இறங்கி பொதுமக்களிடம் சென்று குறைகளைக் கேட்டறிந்த படங்களையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த இரு ஹேஷ்டேக்கும் தான் இணையத்தில் இப்போது மாறி மாறி டிரெண்டாகி வருகிறது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு அங்குள்ள மருத்துவமனையை பெயிண்ட் அடித்து மறுசீரமைக்கும் காணொளி இணையத்தில் வெளியானது. இதைச் சாடிய எதிர்க்கட்சிகள், “காயமடைந்தவர்களைக் கவனிப்பதை விட மோடியின் வருகைக்கு முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இதுவே அவர்கள் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று கருத்து கூறி வருகின்றனர்.
Source : hindustantimes
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.