திருநெல்வேலியில் காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் ஒருவரை கத்தியால் தாக்கிய நபருக்கு காவல்துறை விசாரணையின் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கழிவறையில் வழுக்கி விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் நடைபெற்ற ஒரு கோயில் திருவிழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவின் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் காவல்துறை பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய ஆறுமுகம் என்பவரை காவல்துறையினர் நேற்று(ஏப்ரல் 23) கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “குடிபோதையில் வாகனத்தை ஓட்டியபோது மார்கரெட் தெரசா அபராதம் விதித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரது கழுத்தை அறுத்ததாகவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைப் பறிமுதல் செய்வதற்காக அவரை காவல்நிலையத்திலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது கழிவறையில் மறைத்து வைத்திருந்த கத்தியை அவர் எடுத்து வர முயன்றபோது வழுக்கி விழுந்ததாகவும், அதில் அவரது கை எலும்பு முறிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக் கொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பே பலமுறை இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் சேலத்தில் ஆள்கடத்தல் வழக்கில் கைதான 2 பேர், தப்பிச் செல்ல முயற்சி செய்த பொழுது வழுக்கி விழுந்து அவர்களின் கால்கள் உடைந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி மாதம் செங்கல்பட்டில் நகைக் கடை உரிமையாளரை வெட்டியதாகக் கைதான நபரும் கழிவறையில் வழுக்கி விழுந்துள்ளார்.
சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு
2021 ஆம் ஆண்டு சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி தப்பியோட முயன்றபோது வழுக்கி விழுந்ததில் அவரின் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 2019 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் அரிவாளுடன் மிரட்டிய நபர், காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து தனது கை எலும்பை முறித்துக் கொண்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு சென்னையில் திருட்டு வழக்கில் கைதான 7 பேர் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து தங்களது கை, கால் எலும்புகளை முறித்துக் கொண்டுள்ளனர். அதே ஆண்டு சென்னையில் சண்டையிட்ட 2 மாணவர்கள் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து தங்களது கை எலும்புகளை முறித்துக் கொண்டுள்ளனர்.
இந்த மாதிரி கடந்த 4 ஆண்டுகளில் பல விசாரணை கைதிகள் கழிவறையில் வழுக்கி விழுந்து தங்களது காய்,கால்களை உடைத்துக் கொண்டுள்ளனர்.
இப்படி கழிவறைகளில் வழுக்கி விழுந்துவிட்டதாக காவல்துறை கூறும் காரணத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். விசாரணை கைதிகளில் கையை உடைப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று பலர் காவல்துறையினரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Source : puthiyathalaimurai
தனியார்மயத்தினால் கொழுக்கும் முதலாளிகள் |அதிர்ச்சியளிக்கும் Oxfam அறிக்கை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.