மேற்கு வங்கத்தின் தொழிற்துறை அமைச்சர் ஜாகீர் உசேனை கட்சி மாறச் சொல்லி நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது என்றும், அதன் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று (பிப்ரவரி 17), மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள நிமித்தா ரயில் நிலையத்தில் இருந்து, ஆளும் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த அம்மாநில தொழிற்துறை அமைச்சர் ஜாகீர் உசேன், தன் குடும்பத்தினருடன் ரயிலில் கொல்கத்தாவுக்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவர் மீது நடத்திய நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.
”நான் வாழும் காலம் வரை, வங்கப் புலி போல வாழ்வேன்” – ஜே.பி.நட்டாவிற்கு மம்தா பானர்ஜி பதிலடி
இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் 25 பேர், மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 18) அமைச்சர் ஜாகீர் உசேன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று, அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டறிந்துள்ளார்.
’தேசியவாத பாடம் நமக்கு; தேசத்தின் வளம் தனியாருக்கு’ – பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “தொழிற்துறை அமைச்சர் ஜாகீர் உசேன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் பெரிய சதி உள்ளது. அவரை வேறு ஒரு கட்சியில் இணைய வற்புறுத்தி, சிலர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். அந்த நெருக்கடியின் ஒரு பகுதியாகவே, அவர் மீது இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
எந்தவிதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல், ரயில்வேதுறை மெத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது, இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றும், அமைச்சர் உசேன் மீது தாக்குதல் நடத்த முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கை, மேற்கு வங்க மாநில சிஐடி பிரிவு விசாரணை செய்யும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலர், பாஜவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.