பதவி உயர்வில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் அரசு நிர்வாகத்தின் செயல்திறன் பாதிக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் தொடர்பான புள்ளிவிவரத்தையும் தாக்கல் செய்த ஒன்றிய அரசு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் தனது கொள்கைக்கு ஆதரவாக, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், பதவி உயர்வில் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் அரசு நிர்வாகத்தின் செயல்திறன்கள் பாதிக்காது. ஏனென்றால் செயல் திறனுக்கான அளவுகோலை நிறைவேற்றுவதற்கு தகுதியானவர் என அறிவிக்கப்படும் அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்.
பதவி உயர்வை உறுதிப் படுத்தும்போது, வருடாந்திர செயல் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. பதவி உயர்வு தொடர்பான விஷயங்களை பரிசீலிக்கும்போது, சம்பந்தப்பட்ட துறையின் உயர்வுக் குழுவானது பதவி உயர்வுக்கான அதிகாரிகளின் தகுதியைத் தீர்மானிக்க வேண்டும். இதனால் தகுதியற்றவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
ஒன்றிய அரசின் கீழ் சுமார் 90 அமைச்சகங்கள் அல்லது துறைகள் உள்ளன. இவற்றின் கீழ் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ரயில்வேயில் 13 லட்சம், உள்துறையில் 10 லட்சம், பாதுகாப்புத் துறையில் 3.5 லட்சம், தபால் அலுவலகங்களில் 1.68 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். 44 அமைச்சகங்கள் அல்லது துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி அவற்றின் கீழ் சுமார் 3,800 பதவிகள் உள்ளன. ஒவ்வொரு நிர்வாக கட்டுப்பாட்டு அதிகாரியும் அந்தந்த நிவாக இடஒதுக்கீடு பட்டியலைப் பராமரிப்பது அவசியம் என்று ஒன்றிய அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.
Source: timesofindia
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.