Aran Sei

எல்.ஐ.சியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை – தங்க முட்டையிடும் வாத்தை விற்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

ல் ஐ சி கொடுப்பதாக சொன்ன கடன் தொகையை ஒன்றிய அரசு பயன்படுத்தவில்லை. ஆனால் எல் ஐ சி யை விற்பதற்கு விடாமல் முயற்சிக்கிறது ஒன்றிய அரசு என்று சிபிஎம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், எல்.ஐ.சிக்கும் இந்திய ரயில்வேக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 12.03.2015 அன்று கையெழுத்தானது. அதன்படி எல்.ஐ.சி இந்திய ரெயில்வே நிதிக் கழகத்திற்கு ரூ 1,50,000 கோடி கடன் பத்திரங்கள் வாயிலாக தரப்படும். ஒவ்வோர் ஆண்டு ரூ 30,000 கோடி என்ற முறையில் இந்த கடன் வழங்கப்படும். இந்த தொகை ரயில்வே கட்டமைப்புகளுக்கு வழங்கப்படும்.

ஐந்து ஆண்டுகளுக்கு கடன், கடன் வட்டியைத் திரும்பிச் செலுத்த வேண்டியதில்லை என்றும் தவணை நீட்டிப்பு (Moratorium) தரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. (“பிசினஸ் ஸ்டாண்டர்ட்” 12.03.2015).

அந்நிய முதலீடுகள், தனியார் முதலீடுகள் அதிகமாக அனுமதிக்கப்படுவது ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான நிதியை கொண்டு வரும் என்று பேசிய ஆட்சியாளர்கள் உள் நாட்டு சேமிப்புகளே உறுதியான ஜீவ ஊற்று என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்ததன் வெளிப்பாடே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்தியாவில் தங்க முட்டையிடும் ஒரு நிறுவனமாக எல்.ஐ.சி இருந்ததால் இது சாத்தியம் ஆயிற்று. ஒன்றரை லட்சம் கோடி பெரிய தொகை என்பதால் ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறியது. அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விரைவில் திட்டங்கள் அமலாகும், நிறைய ரயில்கள் ஓடும், ரயில்வே பயணங்கள் அதிகரிக்கும், இதனால் பொருளாதாரம் செழிக்கும் என்றெல்லாம் உற்சாக வசனங்களை பேசினார்

ஐந்து ஆண்டுகளும் ஓடி விட்டன.

என்னதான் ஆயிற்று அந்த புரிந்துணர்வு ஒப்ப்பந்தம் என்று தெரிந்து கொள்ள நாடாளுமன்றத்தில் கேள்வியை (எண் 1238) ஐ எழுப்பினேன். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

பதில்தான் அதிர்ச்சி தருகிறது. எவ்வளவு ஐந்தாண்டுகளில் எல்.ஐ.சி கடன் உதவி பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் பதில் தந்துள்ளார்.

(கோடி ரூபாய்களில்)

2016 – 7000

2017 – 3000

2018 – 6200

2019 – 0

2020 – 4300

மொத்தம் – 20500 கோடி.

ஐந்தாண்டு புரிந்துணர்வு காலமும் முடிந்து விட்டது. ஒன்றரை லட்சம் கோடி என்று ஒப்பந்தம் போட்டும் ரூ 20500 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இரண்டாம் ரயில் பாதைக்கும் (Doubling), மின்சார மயத்திற்கும் (Electrification) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டுகளில் இந்திய ரயில்வே நிதிக் கழகம் பெற்ற கடன் ரூ 1,01,234 கோடிகள்தான். அதில் எல்.ஐ.சி தந்தது மட்டும் 20 சதவீதம். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போல.

நம்முடைய கேள்வி என்னவெனில்

1) எல்.ஐ.சி யோ வலிமையான நிதி நிறுவனம். அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ 1,50,000 கோடி பெற்று இருக்க முடியும். திரு சுரேஷ் பிரபு அன்று சொன்னது போல கட்டமைப்புகளை மேலும் மேலும் வலுப்படுத்தி இருக்க முடியும்? அரசாங்கம் ஏன் செய்யவில்லை?

2) ஒரு கட்டத்தில் நிதி எங்கே? திட்டங்கள் எங்கே ? என்று எல்.ஐ.சி கேட்டதாக கூட செய்திகள் வந்தன. அப்படி ஏதும் திட்டங்கள் உருவாவதில் தாமதமா?

3) இதைவிட அதிர்ச்சி என்னவெனில், இந்திய ரயில்வே நிதிக் கழகம் திரட்டியுள்ள நிதி மொத்தமே ரூ 1,01,234 கோடிகள்தான். எல்.ஐ.சி யிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட தொகையைக் கூட மொத்த நிதி திரட்டல் எட்டவில்லையே?

என்ன திட்டமிடல்? பெரிதாக அரசு அறிவிக்கிற தொகைகளை, திட்டங்களை எப்படி நம்புவது?

தங்க முட்டையிடும் வாத்தை வளர்க்கத் தெரியவில்லையே! இவ்வளவு அரசின் திட்டங்களுக்கு துணை நிற்கும் ஒரு நிறுவனத்தை பங்கு விற்பனைக்கு ஆளாக்குவது என்ன நியாயம்? என்று

எல்.ஐ.சியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை  – தங்க முட்டையிடும் வாத்தை விற்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்