திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அமித் ஷா, மேற்கு வங்கத்தில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், அங்கு நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, ”திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவை போலீஸ் காவலுக்கு அனுப்பிய நீதிபதி குரேஷி – உச்சநீதிமன்ற நியமனங்கள் முடக்கம்
”நீங்கள் அனைவரும் வங்காளத்தின் நலனுக்காகவும், அச்சமின்றி ஒரு தங்க வங்காளத்தை உருவாக்குவதற்கும் வாக்களிக்க வேண்டும். மம்தாவின் சகோதரிகள் குண்டர்களைப் பற்றி பயப்படத் தேவையில்லை. தேர்தல் நாளில் உச்சக்கட்ட பாதுகாப்பு இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஒரு திரிணாமுல் காங்கிரஸ் குண்டர் கூட தெருக்களில் நடமாட முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.
”மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறையில் 130 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸின் குண்டர்களால் கொல்லப்பட்ட 130 தொண்டர்களின் தியாகங்களும் தோல்வியடையாது என்று மம்தா தீதியிடம் சொல்ல விரும்புகிறேன். மக்களின் பேராதரவுடன் மேற்கு வங்க மண்ணில் தாமரை மலரப் போகிறது” என்றும் மத்திய உள்துறை அமைச்சர் பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.
பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் விவசாயிகள் போராட்டம், சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அமித்ஷாவை பகடி செய்து கைதான நகைச்சுவை நடிகர் – பிணை மறுத்த நீதிமன்றம்
அபிஷேக் பானர்ஜியின் மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பாஜக பேரணியில், தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் அமித் ஷா பேசியதாக குறிப்பிட்டுள்ளார் என என்டிடிவி கூறுகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி, அமித் ஷா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.