வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை வெளியிட்டதாக மே 20 ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ரத்தன் லாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான இந்துக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரான ரத்தன் லால், கியானவாபி மசூதி வழக்கை முன்வைத்து சிவலிங்கம் பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
அதுதொடர்பாக லால் மீது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிந்தால், காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். மதத்தின் அடிப்படையில் இருவேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153ஏ, 295ஏ ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் பேராசிரியரைக் கைது செய்தனர். அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கியான்வாபி: சிவலிங்கத்தை விமர்சித்ததாக புகார் – டெல்லி பல்கலை., வரலாற்றுத்துறை பேராசிரியர் கைது
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், “ஒரு தனிநபரின் உணர்வு புண்பட்டதை ஒட்டுமொத்த சமூகத்தையும், குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுபோன்ற உணர்வுகள் புண்படுத்தப்பட்டது தொடர்பான புகார்களை அதன் முழு உண்மைகள் மற்றும் சூழல்களின் பின்னணியிலிருந்து பார்க்கப்பட வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர், அவரின் சுற்றத்தார் மற்றும் பொதுமக்களைக் கருத்தில் கொண்டு தவிர்க்கக்கூடிய கருத்தினை பதிவு செய்துள்ளார் என்பது உண்மைதான். அது கண்டிக்கத்தக்கது. இருந்தாலும் இது இரண்டு சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டுவதாக இல்லை” என்று தனது உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சர்ச்சை தொடர்பாக இனிமேல் சமூக வலைதளப்பதிவு இடுவதையும், நேர்காணல் தருவதையும் தவிர்க்க வேண்டும் என்று பேராசிரியர் ரத்தன் லாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனது பதிவு வைரலான நிலையில், எனக்கு நிறைய இணையவழி மிரட்டல்கள் வருகின்றன என்று பேராசிரியர் ரத்தன் லால் பதிவிட்டிருந்தார். நான் எனது பதிவுக்காக இத்தகைய மிரட்டல்களும், வசவுகளும் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. “கௌதம புத்தரின் காலத்திலிருந்து அம்பேத்கர் வரை, பெரியார் முதல் புலே வரை மதத்தின் மீதான விமர்சனம் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான், எனது பதிவில் விமர்சனம் கூடச் செய்யவில்லை. ஒரு பார்வையைத் தான் பதிவிட்டிருந்தேன்.
நம் நாட்டில் மட்டும்தான் எதற்கெடுத்தாலும் மக்களின் மத உணர்வு புண்பட்டுவிடுகிறது. அப்படியென்றால் என்ன செய்வது? வாயில் பேண்டேஜ் தான் போட்டுக் கொள்ள வேண்டும் போல?” என்று அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பேராசிரியர் ரத்தன் லால் கைது செய்யப்பட்டத்தை கண்டித்தும், தலித் குரல்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் இடதுசாரி மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Source : the print
Nenjukku Needhi Review I சாதி வெறியர்களுக்கு செருப்படி I VCK Vikraman Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.