Aran Sei

பாஜகவுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் – 21 ஆம் தேதி வரை சபை ஒத்திவைப்பு

செங்கோட்டையில் ஒரு நாள் காவிக் கொடி பறக்கும் என பேசிய கர்நாடக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜிய அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடைப்பெற்று வந்த நிலையில், சட்டப்பேரவை பிப்பிரவரி 21ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, “நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமசந்திரர்(ராமர்), மாருதி(அனுமர்) ஆகியோரின் தேர்களில் காவிக்கொடி இருந்தது. அப்போது நம் நாட்டில் மூவர்ண கொடி இருந்ததா? இப்போது அது (மூவர்ண கொடி) நமது தேசியக் கொடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

காவிக்கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறலாம் – கர்நாடக பாஜக அமைச்சர்

டெல்லி செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்ற முடியுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்றில்லை, எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் நடக்கலாம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று சொன்னபோது மக்கள் ஒரு கட்டத்தில் சிரித்தார்கள். ஆனால், தற்போது அதைக் கட்டிக்கொண்டிருக்கிறோம் இல்லையா? அதே போல எதிர்காலத்தில், 100 அல்லது 200 அல்லது 500 ஆண்டுகளுக்குப் பிறகு, பகவ த்வஜ்(காவிக் கொடி) தேசியக் கொடியாக மாறலாம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

நேற்று முன்தினம்(பிப்பிரவரி 17), கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு எதிராக காங்கிரஸ் முன்மொழிந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சட்டப்பேரவை நிராகரித்தது.

செங்கோட்டையில் காவிக் கொடி பறக்கும் – பாஜகவை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்

கே.எஸ்.ஈஸ்வரப்பாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரி வருகிறது. கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆதரவுக் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமய்யா, “பாஜகவும் அதன் சித்தாந்த தலைமையான ஆர்எஸ்எஸ் அமைப்பும் தேசியக் கொடியை அவமதித்துவிட்டன. ஈஸ்வரப்பாவை தகுதி நீக்கம் செய்யச் சொல்லியிருக்க வேண்டும். முதலமைச்சரும் ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் ஈஸ்வரப்பா வழியாக தனது கொள்கைகளை மறைமுகமாக பேரவையில் புகுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.

பாபர் மசூதியை தொடர்ந்து தாஜ்மஹாலை குறிவைக்கும் வலதுசாரிகள் – காவிக்கொடி ஆட்டியவர்கள் கைது

இந்நிலையில், நேற்றும்(பிப்பிரவரி 18) சட்டப்பேரவையில் அமைச்சரை நீக்கக் கோரும் கோரிக்கை தொடர்ந்துள்ளது. காலை பத்து மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஈஸ்வரப்பாவை நீக்கக் கோரி முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து வந்த கேள்வி நேரத்திலும், இம்முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

சபாநாயகர் விக்னேஷ்வர், முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை, மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சட்டப்பேரவை நடவடிக்கைகளை பிப்பிரவரி 21ஆம் தேதி காலை வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் விக்னேஷ்வர் அறிவித்துள்ளார்.

Source: PTI

பாஜகவுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் – 21 ஆம் தேதி வரை சபை ஒத்திவைப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்