அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த 7 மாணவர்கள், கல்லூரி முதல்வர் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெங்களூருவில் ஜெயின் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக கல்லூரியில் கடந்த 8-ந் தேதி மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றின்போது அதில் கலந்து கொண்ட மாணவர்கள், அம்பேத்கரை இழிவுப்படுத்தும் நோக்கில் நாடகம் ஒன்றை நடித்தனர்.
மேலும் தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், தீண்டாமைக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த காணொளியைப் பார்த்த பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அம்பேத்கரை இழிவுபடுத்திய மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் மீது மராட்டியத்தில் தலித் அமைப்பினர் புகார் அளித்தனர். இதேபோல் பெங்களூரு சித்தாப்புரா காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த 7 மாணவர்கள், கல்லூரி முதல்வர் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக 7 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
முன்னதாக பல்கலைக்கழகம் மற்றும் நிர்வாகத்தினர் மீது துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் கூறி இருந்தார்.அம்பேத்கரை இழிவுபடுத்திய பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தேசிய மாணவர் அமைப்பினர், தலித் அமைப்பினர் நேற்று முன்தினம் ஜெயின் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Source : India today
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.