முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்கண்ட் மாநிலத் தலைநர் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தை கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 12 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலைமை சீராகும் வரை இணையதள சேவைகள் நிறுத்தப்படும் என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவர் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (RIMS) கொண்டு வரப்பட்டனர். அவர்களின் உடலில் தோட்டா காயங்கள் இருந்ததாகவும் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
” முகமது முடாசிர் கைஃபி (22) என்பவர் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளார். 24 வயதான முகமது சாஹிலுக்கு கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் உயிரிழந்துள்ளார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரிய வந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இறந்த இருவரும் ராஞ்சியில் வசிப்பவர்கள். மேலும் எட்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத் தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் 13 பேர் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
“காயமடைந்தவர்களில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவல்துறையினரும் அடங்குவர்” என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஞ்சி மாவட்டத்தின் சுக்தேவ் நகர், லோயர் பஜார், டெய்லி மார்க்கெட் மற்றும் ஹிந்த்பிடி உள்ளிட்ட 12 காவல் நிலையப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி மாவட்டத்திலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் கண்காணித்து வருவதாகவும் சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்பேத்கருக்கு எதிராக கலவரம் செய்த சாதிவெறியர்கள் | Amalapuram Ambedkar Issue
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.