அப்துல் ரஹீம் காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில், தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும், சம்பவம் நடந்த இரவு 11.30 மணிக்கு எம்.ஆர். ஜங்ஷனில் முகக்கவசம் அணிந்து நின்றிருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது வந்த இரு காவலர்கள் அவரை விசாரித்துள்ளனர். தற்போது தான் மருந்தகத்தில் பகுதிநேர வேலைப்பார்ப்பதாகக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார்.
அப்போது அப்துல் ரஹீமை மாஸ்க் அணியாததற்கு ரூபாய் 500 அபராதம் கட்டவேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளார்கள். “நான் மாஸ்க் அணிந்து இருக்கும் போது ஏன் அபராதம் கட்டவேண்டும்” என்று அப்துல் ரஹிம் கேட்டுள்ளார். அப்போது உத்திரகுமார் என்று காவலர் அப்துல் ரஹீமை அடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றிய காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்
காவல்நிலையத்தில் அப்துல் ரஹீம் மீது பெட்டிகேஸ் போட்டுள்ளதாகக் காவலர்கள் கூறியுள்ளார்கள். அதற்கு அவரின் கைரேகை என்று மிரட்டியுள்ளனர். இந்நிலையில் அவரது சைக்கிள் மற்றும் அவர் மீது போடப்பட்ட வழக்கைப் பற்றி விளக்கம் கேட்டதற்கு உத்திரகுமார் என்ற காவலர் ரஹீமை தகாத வார்த்தைகளால் திட்டி அவரின் கழுத்திலும் முகத்திலும் தலையிலும் தாறுமாறாக தாக்கியதாக அப்துல் ரஹீம் புகார் அளித்துள்ளார்.
“சட்டப் படிப்பு படித்தால் நீ எல்லாம் பெரிய மயிரா” உங்கள எல்லாம் சும்மா விடக்கூடாது என்று ஆய்வாளர் நசீமா என்பவர் ரஹீமை வெறி தனமாகத் தாக்கியுள்ளார். காவலர்களின் இந்த சித்திரவதையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் எனுமளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளானதாக அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
”வக்கீல எல்லாம் இப்படித்தான் அம்மனமா ஆக்கி ஸ்டேஷன்ல வச்சி அடிக்கனும்” என்று சொல்லி அவரை நிர்வானமாக அமர வைத்ததாகவும், மத ரீதியாக தன்னை இழிவாக பேசியதாகவும்” தன்னுடைய புகார் கடிதத்தில் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
மேலும், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காவலர்கள் தன்னை கொடுமைப் படுத்தியுள்ளனர். காவலர்கள் தாக்கியதில் எனக்கு காயம் ஏற்பட்டது, ரத்தம் வழிவதைத் துடைக்கும்போது தன்மீது காவலர்கள் சிறுநீர் பாய்ச்சியதாக அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்றபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என்று கூறச்சொல்லி காவல்துறை நிர்ப்பந்தித்தனர் என்று ரஹீம் கூறியுள்ளார். காவல்துறையினர் தாக்கியதில் கண்ணுக்கு அருகில் ஆறு தையல் போடுமளவு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கண் சரியாகத் தெரியவில்லை என்று புகாரில் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரண்செய்யிடம் பேசிய ரஹீம்மின் நண்பர், முதலில் ரஹீம் கொடுத்த புகாரை காவல்துறை ஏற்க மறுத்துள்ளது. பின்னர் போராட்டத்தின் காரணமாக காவல்துறையினர் புகாரை ஏற்றுள்ளனர். தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காவலர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ரஹீமின் செல்போன் உள்ளிட்டவை காவல் நிலையத்திலேயே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாகச் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கொடூரமாகத் தாக்கிய கொடுங்கையூர் P6 காவல்துறையினர் காவல் ஆய்வாளர் நசீமா உள்ளிட்ட 9 பேர் மீது 294(பி), 323, 324 ஆகிய இந்தியத் தண்டனை சட்டப் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு தவறும் செய்யாத அப்துல் ரஹீம் மீது முதலில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, மத ரீதியாக இழிபடுத்தியது, கொலை செய்யுமளவிற்கு தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது மிகவும் சாதாரண வழக்குகளே பதிவு செய்திருப்பதன் மூலம் காவலர்களை காப்பற்ற முயல்கிறதா காவல்துறை என வழக்கறிஞர் மில்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.