Aran Sei

திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா ஆளுநருக்கு ஊதியம் தரப்படுகிறது? – திமுகவின் நாளேடான முரசொலி கண்டனம்

ளும் திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா மாநில அரசு ஆளுநருக்கு ஊதியம், மாளிகை, பாதுகாப்பு, வேலையாட்களை தந்து இருக்கிறது? என்று திமுகவின் நாளேடான முரசொலி கண்டனம் வெளியிட்டு இருக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். அவரது பேச்சு தங்களது ஆட்சியை விமர்சிப்பதாக திமுக கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.

நான் பேசுவது தான் வரலாறு என்று திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை விமர்சித்த முரசொலி தலையங்கம்

இந்தநிலையில் திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவிக்குரிய பொறுப்பு உணர்ந்து செயல்படுவதில் பல நேரங்களில் தடம் புரளுகிறார். அவர் தேவையற்ற விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டு, தனது ஆற்றலையும் அறிவையும் காட்டுவதாக எண்ணி தாறுமாறாக பேசி, தமிழ் மக்களின் உணர்வோடு விளையாட தொடங்கியுள்ளார். எல்லை தாண்டி மூக்கை நுழைத்து நோட்டம் பார்க்கிறார்.

தமிழ்நாடு நீங்கள் ஆளுநராக இருந்த மற்ற மாநிலங்களை போன்றதல்ல. இது அரசியல் தெளிவு மிக்க மண். இதனை பலமுறை கூறி விட்டோம். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இதில் சந்தேகம் இருந்தால் மாறுவேடத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி பயணம் செய்து பார்க்கலாம். அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் வாயைக் கொடுத்துப் பார்க்கட்டும். அவர் ஆளுநருக்கு தெளிவான பாடம் நடத்திடும் அளவு அறிவாற்றல் பெற்றவர்.

அக்னிபத் திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவது யார்? – பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த முரசொலி

முதல்நாள், கே.கே.ஷா என்றால், கலைஞர் கருணாநிதி ஷா என்று பேசி விட்டு மறுநாளே ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு பயந்து பல்டி அடித்த ஆளுநர் ஷா பற்றியும், அழுத்தங்கள் ஆயிரம் வந்தாலும், உண்மைக்கு மாறாக கருத்தறிவிக்க ஒப்பேன் என்று நிமிர்ந்து நின்ற ஆளுநர் பர்னாலா குறித்தும், ஜெயலலிதா ஆட்சியின் போது அவராலும், அவரது கட்சியினராலும் பல வகையிலும் அசிங்கப்படுத்தப்பட்டு வெந்து நொந்த சென்னாரெட்டி பற்றியும், மாநில உரிமைகளில் தலையிட்ட ஆளுநர் பன்வாரிலால் திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகளால் சந்தித்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் விளக்கங்கள் தந்து, ஆளுநர் ரவிக்கு தமிழகத்தின் அரசியல் தட்ப-வெப்ப சூழ்நிலைகளை விளக்கிடும் ஆற்றல் பெற்றிருப்பதை அறியலாம்.

நாம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டிக் காண்பிப்பதை கண்டு மிரட்டுவதாக அவர் கருதி விடக்கூடாது.

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்கள் பின்னர் மரியாதை நிமித்தமாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளனர். சந்தித்தவர்கள், தமிழ்நாடு நாட்டிலேயே ஒரு முன்னேறிய மாநிலமாக உள்ளதை குறிப்பிட்டு ஆளுநர் என்ற முறையில் ஆர்.என்.ரவியிடம் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். ஆளுநருக்கு திராவிட மாடல் என்ற சொல் வேப்பங்காயாக கசந்துள்ளது. திராவிட மாடலை அவர்களிடம் விமர்சித்துள்ளார்.

ஆளுநரா? சனாதன காவலரா? – தமிழ்நாடு ஆளுநர் குறித்து முரசொலி தலையங்கம்

அவர் ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்று கூறியபோது மகிழாமல் திராவிடத்தின் மீது அவர் எரிச்சலை கொட்டி இருக்கிறார். ஆளும் ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய, மாநில அரசு ஆளுநர்களுக்கு ஊதியம், மாளிகை, பாதுகாப்பு, எடுபிடிகள், ஏவலாளிகளை தரவில்லை. அரசியல் சட்டம் ஆளுநருக்கு அளித்துள்ள பணிகளை விடுத்து மற்ற எல்லா வேலைகளிலும் சில ஆளுநர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழகத்தில் உருவாகியுள்ள சிறு பொறிகள், நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு, யாரும் எந்த உத்தரவாதமும் தர இயலாது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி உணர வேண்டும்.

சென்னையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ”தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன். தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவேன்” என்று பேசியிருந்தார்.

‘பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் உலை வைக்கும் ஆளுநர் ரவி’ – முரசொலி தலையங்கம்

தெலுங்கானாவில் அவரால் எதையும் நுழைக்க முடியாத ஆதங்கத்தில் தமிழகத்தில் நுழைப்பேன் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை தெலுங்கானாவில் தேவையின்றி மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்துப் பட்டிடும் பாட்டால் வெளிவந்த ஆதங்க பேச்சாகக் கூட இது இருக்கலாம்.

இது தமிழக ஆளுநருக்கு அவர் மறைமுகமாக தந்த எச்சரிக்கையாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து அவர் சொன்ன செய்தியை, ஆளுநர் ஆர்.என்.ரவி கவனமாக படித்திட வேண்டும் என்று முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.

வலது சாரி ஆதரவாளர்னா கெட்ட வார்த்தையா? | பதறியடித்து ஓடிய சுமந்து மாம்ஸ் | Aransei Roast

https://youtu.be/Qf8E_9WC_zg
திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா ஆளுநருக்கு ஊதியம் தரப்படுகிறது? – திமுகவின் நாளேடான முரசொலி கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்