Aran Sei

பாலியல் துன்புறுத்தலைத் தவிர்க்க ஆண் நண்பர்களுடன் பார்த்துப் பழக வேண்டும் – ஜே.என்.யு சுற்றறிக்கைக்கு மாணவியர்கள் எதிர்ப்பு

பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலைத் தவிர்க்கப் ஆண் நண்பர்களுடன் பார்த்துப் பழக வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“ஆண் நண்பர்கள் நட்பான முறையில் கேலி, கிண்டல் செய்வதற்கும் பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கும் இடையே உள்ள ஒரு சிறு மெல்லிய கோட்டை (சில சமயங்களில் வேண்டுமென்றும், சில சமயங்களில் கவனக்குறைவாகவும்) பொதுவாக மீறுகிறார்கள். எனவே பெண்கள் இந்த இரண்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்ந்து ஆண் நண்பர்களுடன் பழகும் போது அதற்கு இடையில் ஒரு உறுதியான கோட்டை வரையத் தெரிந்திருக்க வேண்டும்.” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாலியல் புகார்களை விசாரிக்கும் உள் புகார் குழுவின் சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள் புகார் குழுவின் இந்த சுற்றறிக்கை, பாலியல் துன்புறுத்தல்கள் வரும்போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பல்கலைக்கழக நிர்வாகம், இதற்கு மீண்டும் பெண்கள் மீதே பழி சுமத்துவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

2022 ஜனவரி 17 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை அமர்வுக்கு ஏற்பாடு செய்வதாகவும், அத்தகைய ஆலோசனை அமர்வுகள் மாதாமாதம் நடைபெறும் என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதனையொட்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தான் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பல்கலைக்கழகத்தில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் தொடுகிறார்கள், கட்டிப்பிடிக்கிறார்கள். இது பெண்களுக்குப்  பிடிக்கவில்லையென்றால் அதை அவர்களின் ஆண் நண்பரிடம் தெளிவாகக் கூற வேண்டும். நெருங்கிய ஆண் நண்பர்களால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாக புகார்கள் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன” என்று உள் புகார் குழுவின் தலைமை அதிகாரி புனம் குமாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.

“பல்கலைக்கழகத்தின் பாலியல் புகார்களை விசாரிக்கும் உள் புகார் குழுவின் இந்தக் கருத்து பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக மாற்ற முயல்கிறது. உள் புகார் குழு மீண்டும் மீண்டும் இதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கூறி வருகிறது” என்று இந்த சுற்றறிக்கையை ஒட்டி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஐஷி கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“பல்கலைக்கழகத்தின் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகள் தொடர்பான இந்த ஆலோசனை அமர்வு என்பது ஒரு ஏமாற்று வேலையாகும். மேலும் இது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாற்றவே வழிவகுக்கும்” என்று அகில இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாலியல் துன்புறுத்தலைத் தவிர்க்க ஆண் நண்பர்களுடன் பார்த்துப் பழக வேண்டும் – ஜே.என்.யு சுற்றறிக்கைக்கு மாணவியர்கள் எதிர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்