பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும் (மார்ச் 28), நாளையும் (மார்ச் 29) பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து கழக ஊழியர்கள், வங்கி ஊழியர்களும் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று வருகின்றனர்.
ஒன்றிய அரசின் ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், ஒன்றிய அரசு அலுவலகங்களில் உள்ள 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரம், அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க கூடாது என ஒன்றிய அரசும் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எச்சரிக்கையை மீறி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், துறைரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், இன்று (மார்ச் 27) தலைநகர் சென்னையில் பல இடங்களில், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.