புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியிருப்பதால், அரசின் பெரும்பான்மையை நிருபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு, நாளை (பிப்ரவரி 22) நடைபெறுமென்று துணைநிலை ஆளுனர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் லக்ஷ்மிநாராயணன், திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆட்சி இழக்கும் நிலையில் காங்கிரஸ் உள்ளது.
முன்னர், காங்கிரஸ் அமைச்சரவையில் பொதுப்பணி அமைச்சராக இருந்த நமச்சிவாயம், ஊசுடு தொகுதி (தனி) சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.கவில் இணைந்தனர். ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
அதைத்தொடர்ந்து, நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைச் சட்டமன்ற அவைத்தலைவர் சிவகொழுந்தை நேரில் சந்தித்து வழங்கியிருந்தார்.
ஏற்கனவே, காங்கிரசைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ததால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனிடையே புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, ”மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்காகத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆட்சி முடியும் தருவாயிலும், இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிற சூழ்நிலையிலும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. எனவே ஒட்டுமொத்தமாக அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.
டெல்லி கலவரத்தில் நடந்த கொலை: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சாட்சியளித்துள்ள இந்து குடும்பங்கள்
ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சியினர், முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தித் துணைநிலை ஆளூநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் 22 ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி, நாளைப் புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ லக்ஷ்மிநாராயணன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்டமன்ற அவைத்தலைவர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். மேலும், திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார். சட்டமன்ற அவைத்தலைவரைச் சந்தித்து, வெங்கடேசன் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருப்பதால், புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 12 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.