திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை பாலியல் வல்லுறவு குற்றமா இல்லையா என்பதை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசித்த பின்னரே ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்ற என்று கூறும் ஒன்றிய அரசின் முடிவை டெல்லி உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
ஒரு தீர்க்கமான நிர்வாகி என்பவர் ஒரு விஷயத்தை ஆம் அல்லது இல்லை என இரண்டில் ஒன்றுதான் சொல்ல வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அனைத்து தரப்பிலிருந்தும் கருத்துக்களை பெற்ற பின்னரே தனது முடிவைச் சொல்ல முடியும். அதுவரை இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கு ஏற்கனவே மார்ச் 2 ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து தரப்பு வழக்கறிஞர்களுக்கும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்பிரவரி 7 அன்று திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு குற்றமா இல்லையா என்பதைப் பற்றிய ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை முடிவு செய்ய 2 வாரம் கால அவகாசத்தை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது.
ஆர்ஐடி ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியப் பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் கணவருக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்யுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஒரு ஆண் தனது 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மனைவியுடன் அவளது அனுமதியின்றி உடலுறவு மேற்கொண்டால் அது பாலியல் வல்லுறவு குற்றமாகாது என இந்தியத் தண்டனை சட்டப்பிரிவு 375 இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.