ஜூன் 2 அன்று நாக்பூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியதைத் தொடர்ந்து அதற்கு எழுந்த பரவலான எதிர்வினைகள் அதனை இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் குறைப்பதற்கான அழைப்பு என்று வரவேற்றன. பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் மூலம் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பைத் தூண்டி, அவர்களுக்கு எதிராக வன்முறையை நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பதை இது ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது.
அவ்வாறு இல்லையெனில், ஒவ்வொரு மசூதியிலும் ஒரு சிவலிங்கத்தைக் கண்டுபிடிக்கவோ, தேடவோ தேவையில்லை என்று பகவத் தனது ஸ்வயம் சேவகர்கள் மற்றும் சங்பரிவார் உறுப்பினர்களை இதமாகக் கண்டித்ததைத் தொடர்ந்து செய்தித்தாள்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட நிம்மதி வேறு எதை விளக்குகிறது?
நாட்டில் நடக்கும் வகுப்புவாத கலவரத்தின் சித்தாந்த ஆதாரம் ஆர்.எஸ்.எஸ்.தான் என்று நாம் நம்பும் போதுதான், அவரைப் பின்பற்றுபவர்களை கட்டுப்படுத்தும் அவரது முயற்சி நம்பகமானதாகிறது.
பகவத்தின் கருத்துக்களுக்கு சிலரின் பதில்களைக் கேட்டபோது, தனது ஆட்களின் தரம் தாழ்ந்த செயல்களால் சற்றே கோபமடைந்து, கொடுக்கப்பட்ட வரம்பை மீற வேண்டாம் என்று ஒரு கும்பலின் தலைவன் அவரது ஆதரவாளர்களை பார்த்துக் கேட்பதை காட்சிப்படுத்துவது போல் அவை இருந்தன. அவரது கவலையே அவரது ஆறுதலுக்கு ஆதாரமாகிறது. மசூதிகள் என்பவை மசூதிகள் அல்ல, தங்களுடைய கோவில்கள் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை ஒழுங்குபடுத்தினால் போதாதா? அது வன்முறையைக் குறைக்க வழிவகுக்காதா?
’இதெல்லாம் ஆர்எஸ்எஸ் தந்திரம்’: மோகன் பகவத்தை விமர்சித்த ஓவைசி
இந்த எண்ணமே ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சை பலரையும் பாராட்டத் தூண்டியுள்ளது. தலைமைப் பொறுப்பில் இருப்பதாகச் சொல்லப்படும் அவர் சித்தாந்த தலைவர், பொறுப்பில் இருப்பவர். சொல்லப்போனால், அவரது வார்த்தைகள், மேலும் களத்தில் வன்முறையைத் தூண்டும் அடிமட்ட இந்துத்துவா தொண்டர்களிடம் இது மெல்லிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கியான்வாபி மசூதி வழக்கில் மனுதாரர்கள் சாதாரண பக்தர்கள் அல்ல. இறைவனின் பக்தி அவர்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்று, மசூதியை தங்கள் கோவிலாக மாற்ற முயல்கிறது.
அவர்களின் தலைவர் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) உறுப்பினருடன் தொடர்புடையவர் என்பதுடன், மற்ற இடங்களில், மசூதிகளை கோவில்களாக மாற்றக் கோரி போராட்டம் நடத்துபவர்கள் ஏதோ ஒரு வகையில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதை ஸ்க்ரோல் செய்தி நிறுவனத்தின் (Scroll.in) மே 20 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா அகண்ட பாரதமாக மாறும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து
சில நண்பர்கள் ஆர்எஸ்எஸ் தலைவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளனர்; அவர்கள் அவரை ஆட்டத்தை மாற்றுபவராக பார்க்கிறார்கள். இது எப்படிச் சரியாக சூழ்நிலையை மாற்றும் என்பது அவர்களுக்குத் தெரியாதது மட்டுமல்ல அதனை விளக்கவும் முடியாது.
அவர் இவ்வாறு பேசியிருப்பது, இந்து மதம் அல்லாத பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு உரிமை கோரி அவற்றைக் கோயில்களாக மாற்றும் பிரச்சாரத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்பதற்காகவா? அல்லது மசூதிகளை கோவில்களாக மாற்றக் கோரி ஆர்.எஸ்.எஸ் இனி எந்த இயக்கத்தையும் நடத்தப் போவதில்லை, எந்தப் பிரச்சாரத்திலும் ஈடுபடப் போவதில்லை என்று சொல்வதற்காகவா? நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்குமாறு அவர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர்கள் நீதிமன்ற முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்.
‘இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
“ராம ஜென்ம பூமி இயக்கம் ஒரு விதிவிலக்கு,” என்று பகவத் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ் ஒருமுறை, அதன் இயல்பிற்கு மாறாக, இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இயக்கத்தில் பங்கேற்றது என்று கூறும் அவர், இந்துக்களின் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் எப்படி அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்க முடியும் என்றும் கேட்கிறார். ஆனால் அது ஒரு முறை விதிவிலக்காக இருந்து, அதன் நோக்கத்தை அடைந்த பிறகு, அமைப்பு அதன் முக்கிய பணியான ‘நன்னடத்தை கொண்ட மனிதனை உருவாக்குதல் (வ்யக்தி நிர்மன்)’ என்பதை நோக்கித் திரும்பியதாக ஆர்எஸ்எஸ் தலைவர் கூறுகிறார்.
பகவத்தின் கூற்றுப்படி, ஆர்.எஸ்.எஸ். நன்னடத்தை கட்டியெழுப்பும் பணியில் கவனம் செலுத்த விரும்புகிறது. இருப்பினும், ‘வ்யக்தி’ என்ற சொல் ஒரு தனி நபரைக் குறிக்கவில்லை, அந்தச் சொல்லை நாம் அறிவோம். ஆர்.எஸ்.எஸ்-ன் அகராதியில், அதற்கு ‘ஒரு கும்பலைப் போல நினைத்து நடந்துகொள்ளும் ஒரு மனிதன்’ என்ற ஒரு குறிப்பிட்ட பொருள் உள்ளது. ஆனால் அதற்கு மேலும் பல பொருள்கள் உள்ளன.
இந்த நேரத்தில் ஆர்வமூட்டும் ஒன்று என்னவென்றால், பகவத்தின் பேச்சுக்கு செய்தித்தாள்கள் ஓரளவு பாதுகாப்பான கருத்தை வெளியிட்டன. ஜூன் 4 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற முன்னணி நாளிதழின் தலையங்கம், இந்த உரையை வரவேற்ற பிறகு, “நிச்சயமாக, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான இந்து-இஸ்லாமியர் மோதல்களின் கடந்தகால அனுபவங்களும், அவற்றில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-ன் சொந்த நிழல் அரசியலும் பகவத் சொன்னதையும் அவர் அர்த்தப் படுத்தியதையும் அதீதமாக படிக்காமல் இருப்பதற்கான நல்ல எச்சரிக்கையாக இந்த பேச்சு இருக்கிறது,” என எச்சரிக்கையுடன் எழுதுகிறது,
அத்தகைய ஐயத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது. இஸ்லாமியர்களை எதிரிகள் என்று அழைக்கும் கோல்வால்கரின் ‘சிந்தனைக் கொத்து’ என்ற புத்தகத்தை இனியும் கவைக்குதவாது என்று கூறியதால், 2018 ஆம் ஆண்டில், பகவத் ஒரு வகையான புரட்சியாளர் என்று புகழப்பட்டார். ஆனால் “அந்தத் திருப்புமுனையானது அரசியல் ரீதியாக கணிசமாக எதையும் சாதிக்கவில்லை,” என்று அந்த தலையங்கம் கூறுகிறது.
நமது நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒவ்வொரு அறிவிப்பையும் உற்சாகத்துடன் பின்பற்றுவதும், அதைத் தொடர்ந்து அவர்கள் அடையும் ஏமாற்றமும் யூகிக்கக்கூடிய மாதிரியாகிவிட்டது. இதற்கு ஆர்எஸ்எஸ் செயல்படும் விதம் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதும் அல்லது ஆர்எஸ்எஸ் அடிப்படையில் ஒரு பாசிச அமைப்பு என்று நம்ப மறுப்பதுமே காரணம்.
ஆர்.எஸ்.எஸின் படி யார் இந்து? – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி
நாம் அவற்றை தனித்தனி நிகழ்வுகளாகப் பார்ப்பதும் இதற்கு ஒரு காரணம். பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்களை கொன்று குவிக்கும் கொடூர செயலுக்கு ஒரு நாள் எதிர்வினை ஆற்றுகிறோம். மற்றொரு நாள், இந்து பண்டிகைகளை சாக்காகப் பயன்படுத்தி, இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் வலுக்கட்டாயமாக நுழைந்து வன்முறைகள் நடத்துவதைக் காண்கிறோம். இஸ்லாமிய ஆண்களுக்கும் இந்து பெண்களுக்கும் இடையிலான திருமணங்களுக்கு தவறான கண்காணிப்பை ஏற்படுத்திய ‘காதல் ஜிஹாத்’ என்ற நச்சுக் கருத்து பரப்பப்படுவதைப் போலவே கிருஸ்தவர்கள் மீதும் அவர்களுடைய தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது மற்றொரு தொடர் கதையாகும்.
இந்த அத்தியாயங்களை ஒன்றாக இணைக்கும் இழையை நாம் காணத் தவறுகிறோம். அவர்களை இணைக்கும் இழை ஆர்.எஸ்.எஸ் ஸின் சித்தாந்தம். அது இந்துக்களை இந்து – இந்து சமம் இந்தியன் – தனிச் சிறப்பு வாய்ந்தது என்று நம்ப வைக்கிறது. இந்துக்கள்தான் இந்த தேசத்தின் முதல் ‘உரிமையாளர்கள்’ என்ற ஒரு கருத்தை இது ஊக்குவிக்கிறது.
பகவத் தனது உரையில், பிற்காலத்தில் வந்தவர்கள் அல்லது இந்தியாவுக்கு வெளியே நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளை ஏற்றுக்கொண்டவர்கள், உண்மையில் மனித தர்மமான (உலகளாவிய மதம்) இந்து வழியை மதிக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு உள்ளது என்கிறார். இந்து மதம் மற்ற மதங்களை விட பெரியது, ஏனெனில் இந்து மதம் என்று அழைக்கப்படுவது உண்மையில் மனித தர்மம் என்பது அவரது பார்வை.
தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்குவது “வோ லோக்” (மற்றவர்கள்) என்று பகவத் தெளிவாகக் கூறுகிறார். “ இந்துக்கள் பொதுவாக தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். “உங்கள் மசூதி எனக்கு சொந்தமானது என்று நான் நம்புகிறேன். அதை எதிர்த்து, நீங்கள் கலவரத்தை உருவாக்குகிறீர்கள். நீங்கள் ஒரு சர்ச்சையை உருவாக்கும் போது நான் என் நம்பிக்கையை மட்டுமே கூறுகிறேன்,” என்று அவர் கூறுகிறார். ஒவ்வொரு கலவர பகுதியிலும் வெடி குண்டை கையில் வைத்திருக்கும் போக்கிரிகள் சொல்வதை இது வலுப்படுத்துகிறது.
மேலும் இவை அனைத்தும் வெளிப்படையானவை. இந்து / இந்திய விதிவிலக்கு மற்றும் இந்து வம்சாவளியிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். அவர்களை கேலி செய்வதுடன் அவர்களின் அசல் கலாச்சாரம் இந்து என்பதைத் தவிர வேறல்ல என்று ஏற்றுக்கொள்ளும்படி அவர்களிடம் கோருகிறது. பகவத் சொல்வது போல் – அவர் சொல்வது சரிதான் – ஆர்.எஸ்.எஸ். இந்து மனங்களை வளர்ப்பதில் மும்முரமாக உள்ளது. இந்தச் செயல்தான் மற்ற சமூகங்களுக்கும், உலகத்துக்கும் மிகவும் ஆபத்தானது.
ஷாகாக்கள், சரஸ்வதி சிஷு மந்திர்கள், துர்கா வாஹினி, பஜ்ரங் தள், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், சன்ஸ்கார் பாரதி மற்றும் சங்க பரிவார் குடையின் கீழ் வரும் பல அமைப்புகளில் இந்த மனநிலை வளர்க்கப்படுகிறது. இது, முன்பு கூறியது போல், இது இந்து / இந்திய விதிவிலக்கான நோக்கத்திற்காக எந்த ஒரு வன்முறைச் செயலையும் தூண்டவோ அல்லது ஈடுபடவோ தயாராக உள்ள மனநிலை.
மற்ற எந்த அறிஞரையும் விட ஆர்.எஸ்.எஸ். ஐ மிகவும் நேர்மையுடன் படித்த பால் பிராஸ் முன்மொழிந்த சட்டகத்தைப் பயன்படுத்துவது என்ற இந்த நீண்ட “ஒத்திகை” தான் – ஆர்.எஸ்.எஸ் இன் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறுகிறது. இதுதான் தொடர்கதையாக நாம் பார்க்கும் வன்முறைச் செயல்களுக்கு வழிவகுக்கிறது. பின்னர் அவை முஸ்லீம்களின் பிடிவாதத்திற்கு அல்லது கடந்தகால கற்பனையான அநீதிகளுக்கு எதிர்வினையாக விளக்கப்படுகின்றன அல்லது வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்வதற்கு இந்த செயல்கள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த வன்முறைச் செயல்களைத் தொடங்க ஆர்எஸ்எஸ் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. அது தயாரித்த நடிகர்கள் – வ்யக்திகள் – இந்த செயல்களைச் செய்கிறார்கள். இதற்கு ஆர்எஸ்எஸ். அவர்களிடமிருந்து எந்தப் பலனையும் எதிர்பார்ப்பதில்லை. எடுத்துக்காட்டாக, நாதுராம் கோட்சேவின் செயலுக்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதா? இன்னும் சொல்லப் போனால் கோட்சேவின் கொலையாளி மனநிலை ஆர்.எஸ்.எஸ் ஸின் ஷாகாக்களிலும், அறிவுஜிவிகளாலும் உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல வன்முறைச் செயல்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறதா? அதற்காகத் தயாரிக்கப்பட்ட வ்யக்திகள் இல்லாமல் இதுபோன்ற செயல்கள் சாத்தியமாகியிருக்குமா?
இந்த வெறுப்புத் தொழிற்சாலைக்கு சித்தாந்த ரீதியாக தலைமை தாங்கும் மனிதன் அமைதியை விரும்புவான் என்று நினைப்பது அப்பாவித்தனமாகவே இருக்கும். இன்னும்…
www.thewire.in இணையதளத்தில் அபூர்வானந்த் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
மொழிபெயர்ப்பாளர் : நாராயணன்
ஆபத்தான RSS அஜெண்டா!! பலியாகும் இளைஞர்கள் !! #BoycottqatarAirways
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.